மேலும் நீட்டிக்கப்படுகிறது ஊரடங்கு.? நாளை ஆலோசனை குழு கூட்டத்திற்குப் பின்னர் வெளியாகிறது முடிவு.
கொரோனா நோய் தொற்று பரவலை கட்டுப்படுத்த வழிமுறைகள் குறித்து அரசுக்கு ஆலோசனை வழங்க அமைக்கப்பட்ட ஆலோசனை குழுவின் முதல் கூட்டம் (சனிக்கிழமை) நாளை காலை 11:30 மணிக்கு முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையில் நடைபெறுகிறது.
கொரோனா நோய் தொற்று பரவலை கட்டுப்படுத்த வழிமுறைகள் குறித்து அரசுக்கு ஆலோசனை வழங்க அமைக்கப்பட்ட ஆலோசனை குழுவின் முதல் கூட்டம் (சனிக்கிழமை) நாளை காலை 11:30 மணிக்கு முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையில் நடைபெறுகிறது. ஆக்கூட்டத்திற்குப் பின்னர் ஊரடங்கு நீட்டிப்பது குறித்து முக்கிய முடிவு எடுக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் சட்டமன்ற கட்சி தலைவர்கள் கூட்டம் கடந்த 13 ஆம் தேதி நடைப்பெற்றது.
அக்கூட்டத்தில், நோய் தொற்று பரவலை கட்டுப்படுத்தும் வழிமுறைகள் குறித்த ஆலோசனைகளை வழங்க முதலமைச்சர் தலைமையில் சட்டமன்ற கட்சிகளை சார்ந்த உறுப்பினர்களை கொண்ட ஒரு ஆலோசனை குழு அமைப்பதென தீர்மானிக்கப்பட்டு குழு உறுப்பினர்கள் பட்டியலும் அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் இந்த குழுவின் முதல் ஆலோசனை கூட்டம் முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையில், வரும் 22 ஆம் தேதி சனிக்கிழமை அன்று காலை 11:30 மணிக்கு நடைபெறுகிறது.
இந்த கூட்டத்தில் தமிழகத்தில் தற்போது மேற்கொள்ளப்பட்டு வரும் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்தும், வரும் 24 ஆம் தேதிக்கு பிறகு முழு ஊரடங்கை நீட்டிப்பது குறித்தும் உறுப்பினர்களின் கருத்துக்கள் கேட்கப்படவுள்ளதாக கூறப்படுகிறது. இந்த கூட்டத்தை தொடர்ந்து மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் மருத்துவ வல்லுனர்கள் குழுவுடனும் முதலமைச்சர் ஆலோசனை நடத்தவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த கூட்டங்களில் பெறப்படும் கருத்துக்களின் அடிப்படையில் ஊரடங்கு நீட்டிப்பது குறித்தும் கட்டுப்பாடுகளை மேலும் தீவிரப்படுத்துவது குறித்தும் அரசு முடிவெடுக்கலாம் என கூறப்படுகிறது..