15 பேரிடம் 76 லட்சத்தை ஆட்டையை போட்ட முன்னாள் பெண் அமைச்சர்.. உறவினரே போலீசில் பகீர் புகார்..!
பணம் கொடுத்தவர்கள் நெருக்கடி கொடுத்து வருகின்றனர். எனது நிலைமை விளக்கி கூறிய போது நாங்கள் அமைச்சரிடம் கொடுக்கவில்லை, உங்களிடம் தான் கொடுத்தோம். எனவே பணத்தை திருப்பிகொடுக்காவிட்டால் போலீசில் புகார் கொடுப்பேன் என மிரட்டுகின்றனர் என்றார்.
வேலை வாங்கி தருவதாக கூறி ரூ.76.50 லட்சம் மோசடி செய்ததாக அதிமுக முன்னாள் அமைச்சர் சரோஜா மீது அவரது உறவினர்களே புகார் தெரிவித்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சேலம் மாவட்டம் சங்ககிரிபகுதியை சேர்ந்தவர் டாக்டர் சரோஜா. அதிமுக மாநில மகளிரணி இணை செயலாளரான இவர் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு ராசிபுரம் பகுதியில் புதுப்பாளையம் சாலையில் வீடு கட்டி வசித்து வருகிறார். கடந்த அதிமுக ஆட்சியில் ராசிபுரம் தொகுதியில் வெற்றி பெற்று சத்துணவு மற்றும் சமூக நலத்துறை அமைச்சராக இருந்தார். நடந்து முடிந்த சட்டப்பேரவை தேர்தலில் மீண்டும் ராசிபுரம் தொகுதியில் போட்டியிட்டு திமுக வேட்பாளரிடம் தோல்வியடைந்தார். அமைச்சராக இருந்த போதே சரோஜா மீது பல்வேறு இருந்து வந்தன.
இந்நிலையில், அவரது உறவினர் குணசீலன் முன்னாள் அமைச்சர் சரோஜா சத்துணவு திட்டத்தில் வேலை வாங்கி தருவதாக கூறி ரூ.76 லட்சத்து 50 ஆயிரம் மோசடி செய்ததாக ராசிபுரம் போலீசில் புகார் அளித்துள்ளார். அதில், சத்துணவு திட்டத்துறையில் வேலை வாங்கித் தரக்கோரி 15 பேர் தன்னிடம் ரூ.76.50 லட்சம் பணம் அளித்தனர். இந்த தொகையை முன்னாள் சமூகநலன் மற்றும் சத்துணவு திட்டத்துறை அமைச்சர் சரோஜாவிடம் வழங்கினேன். எனினும், அவர் வேலை எதுவும் வாங்கித் தராமல் மோசடி செய்துள்ளார். இதனால், பணம் கொடுத்தவர்கள் நெருக்கடி கொடுத்து வருகின்றனர். எனது நிலைமை விளக்கி கூறிய போது நாங்கள் அமைச்சரிடம் கொடுக்கவில்லை, உங்களிடம் தான் கொடுத்தோம். எனவே பணத்தை திருப்பிகொடுக்காவிட்டால் போலீசில் புகார் கொடுப்பேன் என மிரட்டுகின்றனர் என்றார்.
முன்னாள் அமைச்சர் மீது மோசடி புகார் அளித்த குணசீலன், ராசிபுரம் கூட்டுறவு வீட்டுவசதி சங்கத்தில் மேலாளராக பணிபுரிந்து ஓய்வு பெற்றவர். மேலும், இவர் முன்னாள் அமைச்சர் சரோஜாவின் அண்ணன் மருமகன் என்பது குறிப்பிடத்தக்கது. ஏற்கனவே அதிமுக முன்னாள் அமைச்சர்களான எஸ்.வேலுமணி, ராஜேந்திரபாலாஜி, வீரமணி ஆகியோர் மீது மோசடி புகார் இருப்பது குறிப்பிடத்தக்கது.