அதிமுகவில் இருந்து திமுகவில் உதயமான 7 மாஜி அதிமுக அமைச்சர்கள் பட்டியலில் 8வதாக இணைகிறார் நிலோபர் கபில் என்று அழுத்தமாக சொல்கிறார்கள் வாணியம்பாடி அதிமுகவினர். 


அதிமுகவின் மாஜி அமைச்சர்கள் 7 பேர் திமுகவில் உதயமாகி, தற்போதைய அமைச்சரவையிலும் இடம்பெற்றிருக்கிறார்கள். சாத்தூர் ராமச்சந்திரன்,(வருவாய், மாவட்ட வருவாய் நிர்வாகம், துணை ஆட்சியர்கள், பேரிடர் மேலாண்மை), ராஜகண்ணப்பன்,(போக்குவரத்து, நாட்டுடைமையாக்கப்பட்ட போக்குவரத்து, இயக்கூர்தி சட்டம்), எ. வ. வேலு,(பொதுப்பணித்துறை) முத்துசாமி,( வீட்டு வசதி துறை, ஊரக வீட்டு வசதி, நகரமைப்பு திட்டமிடல், வீட்டுவசதி மேம்பாடு, இடவசதி கட்டுப்பாடு,நகரதிட்டமிடல், நகர்ப்பகுதி வளர்ச்சி, சென்னை பெருநக்ர வளர்ச்சி குழுமம்)

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

ரகுபதி, (சட்டம், நீதிமன்றம், சிறைச்சாலை, ஊழல் தடுப்புச்சட்டதுறை), அனிதா ராதாகிருஷ்ணன், (மீன்வளம், மீன் வளர்ச்சிக்கழகம், கால்நடை பரமாரிப்பு), செந்தில்பாலாஜி (மின்சாரம், மரபுசாரா எரிசக்தி மேம்பாடு, மதுவிலக்கு ஆயத்தீர்வை, கருப்பஞ்சாறு கசண்டு, மொலாசஸ்). ஏழு பேரும் அதிமுகவில் அமைச்சர்களாக இருந்தவர்கள் இவர்களில் வேலு, சாத்தூர் ராமச்சந்திரன் உள்ளிட்டோர் முன்னதாகவே திமுகவின் அமைச்சராகவும் இருந்துள்ளனர்.

அதிமுகவில் இருந்து திமுகவில் உதயமான 7 மாஜி அதிமுக அமைச்சர்கள் பட்டியலில் 8வதாக இணைகிறார் நிலோபர் கபில் என்று அழுத்தமாக சொல்கிறார்கள் வாணியம்பாடி அதிமுகவினர்.

அதிமுகவின் மாஜி அமைச்சர்கள் பலர் மீது ஊழல்குற்றச்சாட்டுகள் இருந்தபோதிலும் கூட, என்னை மட்டும் கட்டம் கட்டி கட்சியை விட்டு நீக்கியது ஏன்? என்று கேள்வி எழுப்புகிறார் மாஜி அமைச்சர் நிலோபர் கபில். ஆனால், நிலோபர் கபிலை கட்சியை விட்டு நீக்கியதற்கு ஊழல் குற்றச்சாட்டு ஒன்றும் முக்கியமான காரணமல்ல; அவர் திமுக பக்கம் சாய்வதை தெரிந்துதான் கட்சியை விட்டு நீக்கியிருக்கிறது தலைமை என்கிறது அதிமுக வட்டாரம்.

’’எனது தாயும் சகோதரியும் சென்னையில் கொரோனா தொற்றினால் சிகிச்சை பெற்று வந்தார்கள். 15 நாளைக்கு முன்னர் என் தாய் இறந்துவிட்டார். சகோதரிக்கு வெண்டிலேட்டர் தேவை இருந்தது. அதனால், வாணியம்பாடியில் என் மகன் நடத்தி வரும் மருத்துவமனையிலிருந்து வெண்டிலேட்டர் எடுத்துச் செல்வதற்காக வாணியம்பாடி வந்தேன். அப்போது திமுக மா.செ. தேவராஜ் என்னை தொடர்புகொண்டு, என் தாயின் இறப்புக்கு துக்கம் விசாரித்தார். இதனால் அவரை நேரில் சந்தித்து அவருக்கு வாழ்த்து சொல்ல நினைத்தேன். பயணியர் விடுதியில் அவர் இருப்பதாக சொன்னார். சென்னை செல்லும் வையில்தான் பயணியர் மாளிகை இருப்பதால், வழியில் காரை நிறுத்திவிட்டு தேவராஜை சந்தித்து வாழ்த்து தெரிவித்தேன். இதனால்தான் என்னை கட்சியை விட்டு நீக்கியுள்ளனர்.

மனிதாபிமானத்தில் தேவராஜ் என்னிடம் துக்கம் விசாரித்தார். பதிலுக்கு நான் அவரை வாழ்த்தினேன். இதற்காகத்தான் என்னை கட்சியை விட்டு நீக்கியிருக்கிறார்கள். அதுவும் என் அம்மா இறந்த இந்த நேரத்தில் என்னை நீக்கியிருக்கிறார்கள்.

என் அம்மாவின் மறைவு குறித்து திமுக மா.செ.தான் துக்கம் விசாரித்தாரே தவிர, அதிமுக மா.செ., விசாரிக்கவே இல்லை. அமைச்சராக இருந்தும் இதுநாள்வரைக்கும் என்னை கட்சி மதிப்பதே இல்லை’’ என்று சொல்லிவிட்டு, ‘’திமுகவில் நான் சேர்கிறேனா? இல்லையா? என்பது உங்களுக்கே விரைவில் தெரியவரும்’’ என்று, நிலோபர் கபில் சொல்வதைப்பார்த்தால் அவர் திமுகவில்தான் இணையவிருக்கிறார் என்றே தெரிகிறது.