ரெய்ட பார்த்து எங்களுக்கு பயமா? நாங்கள் டபுள் டாக்டரேட் முடிச்சவங்க.. அசால்டு செய்யும் செல்லூர் ராஜூ..!
முன்னாள் அமைச்சர்கள் வீடுகளில் லஞ்ச ஒழித்துறையினர் சோதனை நடத்துவது குறித்து அதிமுக கவலைப்படவில்லை. கருணாநிதி காலத்திலேயே நாங்கள் எத்தனையோ சோதனைகளை சந்தித்துள்ளோம்.
எல்கேஜி படிக்கும் அச்சுறுத்தலை சந்தித்த அதிமுகவிற்கு தற்போது டாக்டர் பட்டம் பெற்ற பின் அடக்குமுறையை சந்திப்பது பெரிய விஷயமல்ல என்று முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ தெரிவித்துள்ளார்.
திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் முதல்வராக பொறுப்பேற்றதில் இருந்து முன்னாள் அமைச்சர்கள், அதிமுக நிர்வாகிகள் வீடு மற்றும் அலுவலகங்களில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் அடுத்தடுத்து அதிரடி சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். இதற்கு அதிமுக தரப்பில் கடும் கண்டனம் தெரிவிக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில், மதுரையில் முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ தலைமையில் அதிமுக ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதனையடுத்து, செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த செல்லூர் ராஜூ;- முன்னாள் அமைச்சர்கள் வீடுகளில் லஞ்ச ஒழித்துறையினர் சோதனை நடத்துவது குறித்து அதிமுக கவலைப்படவில்லை. கருணாநிதி காலத்திலேயே நாங்கள் எத்தனையோ சோதனைகளை சந்தித்துள்ளோம். எல்.கே.ஜி படிக்கும் போதே அச்சுறுத்தலை சந்தித்தோம். இப்போது அச்சுறுத்தலில் டபுள் டாக்டரேட் முடித்துவிட்டோம். எனவே எங்களுக்கு பயம் இல்லை என செல்லூர் ராஜூ கூறியுள்ளார்.