வேதா இல்லம் குறித்து அதிமுக செயற்குழு கூட்டத்தில் ஆலோசித்து மேல்முறையீடு செய்ய உள்ளோம் என அதிமுக இணை ஒருங்கிணைப்பாளரும், எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி கே. பழனிசாமி தெரிவித்துள்ளார்

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட விருப்பம் தெரிவித்தவர்களிடம் இருந்து, சேலம் மாநகர மாவட்ட அதிமுக கட்சி அலுவலகத்தில் விருப்ப மனு பெறப்பட்டு வருகிறது. விருப்ப மனு பெற இன்று கடைசி நாள் என்பதால் இந்த பணிகளை அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி கே. பழனிசாமி இன்று காலை பார்வையிட்டார். தொடர்ந்து அவர் விருப்ப மனுக்களை பெற்றுக்கொண்டார்.பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ‘அம்மா கிளினிக் தொடர்ந்து செயல்பட வேண்டும். இதில் பணியாற்றும் 1,800 மருத்துவர்கள் மற்றும் 1,240 மருத்துவ உதவியாளர்களை நீக்கக் கூடாது.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

அம்மா கிளினிக் தொடர்ந்து இயங்க திமுக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். தொடர் மழையால் டெல்டா விவசாயிகள் பெரிதும் பாதிப்படைந்துள்ளனர். எனவே மீண்டும் சேத மதிப்பு கணக்கிட்டு, நிவாரண உதவித் தொகையை அரசு உடனே வழங்க வேண்டும். தற்போது பல விவசாயிகள் பயிர் காப்பீட்டு திட்டத்தில் சேர்ந்துள்ளனர். இவர்களுக்கும் நிவாரண தொகை கிடைக்க வழிவகை செய்ய வேண்டும். பருவ மழையால் விவசாயிகள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். அறுவடைக்குத் தயாராகி இருந்த பல நெற்பயிர்கள் நீரில் மூழ்கியுள்ளன. அந்த விவசாயிகளுக்கு ஒரு ஹெக்டேருக்கு 60 ஆயிரம் ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும். 

மழை காலத்தில் பாதிக்கப்பட்ட பொது மக்களுக்கு உணவு சரியாக வழங்கப்படவில்லை என்று கேள்விப்பட்டேன். பாதிக்கப்பட்டவர்களுக்கு உணவு மற்றும் மருந்து பொருட்கள் உடனே வழங்க வேண்டும். கொள்முதல் செய்யப்பட்ட நெல் வீணாகிறது. மழையால் நெல் வீணாவதை தடுக்க வேண்டும். ஏற்கெனவே மழை பெய்திருந்தது. அப்போது கூடுதலாக மோட்டார்கள் வைத்து தண்ணீர் இறைத்து இருக்கலாம். சென்னையில் தேங்கியுள்ள மழை நீரை அகற்ற உடனே நடவடிக்கை எடுக்க வேண்டும். அம்மா உணவகத்தில் பணியாற்றும் ஊழியர்களுக்கு சம்பளம் குறைக்கப்பட்டிருக்கிறது. சம்பளத்தை குறைக்காமல் முழுவதும் வழங்க வேண்டும்.

சேலத்தில் வீடு விழுந்து 6 பேர் இறந்துள்ளனர். இதில் பாதிக்கப்பட்டவர்களுக்கு உடனே வீடு கட்டித்தர வேண்டும். அதுவரை அவர்களுக்கு தற்காலிகமாக தங்க இட வசதி செய்து தரவேண்டும். இறந்தவர்களுக்கு ரூ. 5 லட்சம் இழப்பீடு வழங்கப்பட்டுள்ளது. இதை ரூ.15 லட்சமாக உயர்த்தி தரவேண்டும்.

வெள்ள பாதிப்பு குறித்து மாநில அரசு கேட்கும் நிதியை வழங்க வேண்டும் என்று அதிமுக சார்பில் மத்திய அரசிடம் வலியுறுத்துவோம்.டெல்டா விவசாயிகளின் துயரங்களைப் போக்க திமுக அரசு முன்வர வேண்டும். அதிமுக அரசு நேர்மையான முறையில் ஆட்சி செய்தது, ஜனநாயக முறையில் செயல்பட்டது. ஆளுங்கட்சி, எதிர்க்கட்சி என்ற பாகுபாடு பார்க்கவில்லை. வேதா இல்லம் அரசுடைமை ஆக்குவதற்கு, அதிமுக செயற்குழு கூட்டத்தில் ஆலோசனை செய்து நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்வோம்’ என்றார்.