வரும் 28ஆம் தேதி குறுக்கு விசாரணை - டிடிவியை துரத்தும் அந்நிய செலாவணி வழக்கு!!
டிடிவி தினகரன் மீதான அந்நிய செலாவணி வழக்கில், ஆவணங்களை தாக்கல் செய்ய அமலாக்கத்துறை மெத்தனம் காட்டுவதாக கூறி வழக்கு விசாரணையை வரும் 28 ஆம் தேதி நீதிபதிகள் ஒத்தி வைத்தனர்.
1996 ஆம் ஆண்டு இங்கிலாந்தில் இருந்து தொலைகாட்சி மற்றும் தொலைத்தொடர்பு சாதனங்கள் வாங்கியதில் மோசடி செய்ததாக சசிகலா, டிடிவி தினகரன், அவரது உறவினர் பாஸ்கரன் உள்ளிட்டோர் மீது அமலாக்கத்துறையினர் வழக்கு பதிவு செய்தது.
இதுகுறித்த வழக்கில் எழும்பூர் நீதிமன்றம் டிடிவி தினகரனை விடுவித்தது. ஆனால், கீழமை நீதிமன்றங்களின் இந்த உத்தரவை எதிர்த்து அமலாக்கத்துறையினர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.
வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம் தினகரனை தொடர்ந்து விசாரணை செய்ய வேண்டும் என உத்தரவிட்டது. அதன்படி எழும்பூர் குற்றவியல் நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்று வருகிறது.
இது தொடர்பான வழக்கு விசாரணையில், டிடிவி தினகரன் இன்று எழும்பூர் பொருளாதார குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜரானார். வழக்கு விசாரணையின்போது, சாட்சிகளை ஆஜர்படுத்த அமலாக்கத்துறைக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
மேலும், ஆவணங்களை தாக்கல் செய்ய அமலாக்கத்துறை மெத்தனம் காட்டுவதாகவும் நீதிபதிகள் கண்டனம் தெரிவித்தனர். அமலாக்கத்துறைக்கு கால அவகாசம் கொடுத்து இது தொடர்பான வழக்கு விசாரணையை வரும் 28ஆம் தேதி குறுக்கு விசாரணைக்கு உத்தரவிட்டு நீதிமன்றம் ஒத்தி வைத்தது.