for rk nagar election government spend more than 3 crore rupee

ஆர்.கே.நகர் இடைத்தேர்தலுக்காக அரசு செலவு செய்த தொகை, ரூ.3 கோடியை தாண்டியுள்ளது. இதனை தமிழக தலைமை தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானி தெரிவித்துள்ளார்.

சென்னை ஆர்.கே.நகர் தொகுதியில் டிசம்பர் 21 ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெற்றது. இதில் சுமார் 78% வாக்குகள் பதிவாகியுள்ளது. பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுளத இந்தத் தேர்தலில் பதிவான வாக்குகள் நாளை எண்ணப் படுகின்றன. நாளை மதியமே முடிவு அறிவிக்கப் பட்டு விடும் என்று கூறப்படுகிறது.

இந்தத் தேர்தலுக்கு ஆன செலவு ரூ. 3 கோடியைத் தாண்டியுள்ளதாம். இது குறித்து தலைமைத் தேர்தல் ஆணையர் ராஜேஷ் லக்கானி கூறுகையில், “சாதாரணமாக, ஒரு பொதுத் தேர்தலை நடத்தும் போது, ஒரு தொகுதிக்கு ரூ.30 லட்சம் முதல் ரூ.40 லட்சம் வரை செலவாகும். அந்தத் தொகுதியில் இடைத்தேர்தல் நடந்தால், அதற்காக ரூ.60 லட்சம் வரை செலவாகும். ஆனால் டிச.21ல் நடைபெற்ற ஆர்.கே.நகர் இடைத்தேர்தலுக்கு மட்டும், செலவு ரூ.3 கோடியைத் தாண்டிவிட்டது. சொல்லப் போனால் தேர்தல் பணியில் பயன்படுத்தப்பட்ட வாகனங்களுக்கான செலவு மட்டுமே ரூ.1.30 கோடி ஆகியுள்ளது.

ஆர்.கே.நகர் தேர்தலில் போட்டியிட்ட 59 வேட்பாளர்களும் 3 தடவைகளாக தங்களது தேர்தல் செலவுக் கணக்கை தாக்கல் செய்யலாம். இதற்கு ஒரு மாத கால அவகாசம் கொடுக்கப் பட்டுள்ளது. இடைத்தேர்தலின் போது வன்முறை எதுவும் நடக்கவில்லை” என்று கூறினார் ராஜேஷ் லக்கானி. 

ஒரு புறம் வாக்குக்கு ரூ.6 ஆயிரம் என்று ஒரு கட்சி கொடுத்ததாகவும், ரூ.7 ஆயிரம் ஒரு கட்சி கொடுத்து செலவழித்ததாகவும் பரவலாக கூறப்படும் நிலையில், இந்தத் தேர்தலுக்காக அரசும் கோடிக் கணக்கில் செலவழித்துள்ளது.