இதுக்கு இனி பிளட் டெஸ்ட் கூட பண்ணுவாங்க போல !! உச்சநீதிமன்றம் கிண்டல் !!
ஆதார் பதிவின்போது தற்போது கருவிழிகள், கைரேகை போன்றவற்றை ஆதாரமாக எடுத்துக் கொள்ளும் மத்திய அரசு இனி வரும் காலங்களில் ரத்த மாதிரியைக் கூட கேட்பார்களோ என உச்சநீதிமன்றம் கவலை தெரிவித்துள்ளது.
‘ஆதார் திட்டம் செல்லுமா? என்பது பற்றி விசாரிக்க சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையில் 5 நீதிபதிகள் அடங்கிய அரசியல் சட்ட அமர்வு அமைக்கப்பட்டுள்ளது.
இந்த அமர்வு முன்பு, நேற்று மத்திய அரசு சார்பில் அட்டார்னி ஜெனரல் கே.கே.வேணுகோபால் ஆஜராகி வாதாடினார். அப்போது, இன்றைய டிஜிட்டல் உலகத்தில், சட்டவிரோத பண பரிமாற்றத்தை தடுப்பதற்கும், மானியம் மற்றும் நலத்திட்ட உதவிகள் பயனாளிகளுக்கு கிடைப்பதற்கும் ஆதார்தான் சிறந்த வழி. இது, வல்லுநர்களால் ஒப்புதல் அளிக்கப்பட்ட திட்டம். அரசின் கொள்கை முடிவு. ஆகவே, இது கோர்ட்டு ஆய்வுக்கு உட்பட்டது அல்ல என தெரிவித்தார்..
இத்திட்டத்தை உலக வங்கி பாராட்டி உள்ளது. அரசின் ஒவ்வொரு நடவடிக்கையையும் கோர்ட்டு ஆய்வு செய்தால், வளர்ச்சி பணிகள் தாமதம் ஆகும். சட்டத்தின் பார்வையை விளக்குவதுதான் கோர்ட்டின் வேலை. ஒரு கொள்கை முடிவு, நியாயமானதா? இல்லையா? என்று கோர்ட்டு முடிவு செய்யக் கூடாது என்றும் அவர் கேட்டுக் கொண்டார்..
அப்போது நீதிபதிகள், பயோமெட்ரிக் என்பது எல்லை இல்லாதது என்பது அனைவருக்கும் தெரியும். இனி வரும் காலங்களில் ஆதாருக்காக ரத்த மாதிரியை கூட கேட்பார்களோ என்று கவலை தெரிவித்தனர்.
அதற்கு பதில் அளித்த அட்டார்னி ஜெனரல் கே.கே.வேணுகோபால், ரத்தம், சிறுநீர், மரபணு கூட ஆதார் பதிவில் சேர்க்கப்படலாம். அதையும் கோர்ட்டு ஆய்வுக்கு உட்படுத்துங்கள் என்று தெரிவித்தார்.