பட்டாசுத் தொழிலாளர்களுக்கு உயிர் பாதுகாப்பு தேவை.. தமிழக அரசுக்கு கி.வீரமணி வைத்த வேண்டுகோள்.
பட்டாசுத் தொழிற்சாலை வெடி விபத்துகள் அடிக்கடி நிகழ்வதைத் தடுக்கும் பாதுகாப்பு முறைகளைத் தக்காரைக் கொண்டு ஆராய்ந்து செயல்படுத்திட அரசு அவசரமாக முன்வருதல் முக்கியம்.
பட்டாசுத் தொழிலாளர்களுக்கு உயிர் பாதுகாப்பு தேவை என தமிழக அரசுக்கு திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி வேண்டுகோள் விடுத்துள்ளார். இது குறித்து அவர் வெளயிட்டுள்ள அறிக்கையின் விவரம்: விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே உள்ள அச்சங்குளம் என்ற ஊரில் பட்டாசுத் தொழிற்சாலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் 13 பேர் பலியாகியுள்ளனர். மேலும் பலர் காயமடைந்துள்ளனர் என்ற வேதனையான செய்தி கேட்டு மிகவும் துயரப்படுகிறோம்.
இது போல அம்மாவட்டத்தில் பட்டாசுத் தொழிற்சாலை வெடி விபத்துகள் அடிக்கடி நிகழ்வதைத் தடுக்கும் பாதுகாப்பு முறைகளைத் தக்காரைக் கொண்டு ஆராய்ந்து செயல்படுத்திட அரசு அவசரமாக முன்வருதல் முக்கியம். மரணம் அடைந்தவர்களுக்கு ஆறுதல் நிதி தருவதோடு விவகாரம் முடிந்துவிட்டது என்று கருதக்கூடாது.
வரும் முன்னர் காத்து விலை மதிப்பற்ற மனித உயிர்களை, தொழிலாளர் தோழர்களின் குடும்பங்களைப் பாதுகாக்க நிரந்தர ஏற்பாட்டினைச் செய்வது அவசர அவசியம். உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு நமது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறோம்.என அவர் கூறியுள்ளார்.