அடுத்தகட்டத்தை எட்டிய தேர்தல் திருவிழா... இன்றுடன் 4,600க்கும் மேற்பட்டோர் வேட்புமனு தாக்கல்...!
இறுதி நாளான இன்று பல்வேறு அரசியல் கட்சி, சுயேட்சை வேட்பாளர்கள் வேட்புமனு தாக்கல் செய்த நிலையில், இன்று மாலை 3 மணியுடன் வேட்புமனு தாக்கல் நிறைவடைந்தது.
தமிழக சட்டமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு ஏப்ரல் 6ம் தேதி நடைபெற உள்ளது. இந்த முறை திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள், அதிமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள், தினகரனின் அமமுக, கமலின் மக்கள் நீதி மய்யம், சீமானின் நாம் தமிழர் கட்சி என ஐந்து முனை போட்டி நிலவுகிறது. அதுமட்டுமின்றி நடிகர்கள், சீட் கிடைக்காத அதிருப்தியில் முக்கிய கட்சியின் நிர்வாகிகள் பலரும் சுயேட்சையாக களமிறங்கியுள்ளனர்.
சட்டமன்ற தேர்தலில் போட்டியிடுவதற்கான வேட்புமனு தாக்கல் கடந்த 12ம் தேதி தொடங்கியது. முதல் நாளான அன்று துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்ட வெகு சிலரே வேட்புமனு தாக்கல் செய்தனர். 13,14 ஆகிய தேதிகள் விடுமுறை என்பதால் வேட்புமனு தாக்கல் நடைபெறவில்லை. அதன் பின்னர் சுபமுகூர்த்த நாளான மார்ச் 15ம் தேதி அன்று அனைத்து கட்சியின் முதல்வர் வேட்பாளர்களான எடப்பாடி பழனிசாமி, மு.க.ஸ்டாலின், டிடிவி தினகரன், சீமான், கமல் ஹாசன் ஆகியோர் வேட்புமனு தாக்கல் செய்தனர்.அதனைத் தொடர்ந்து முன்னாள், இந்நாள் அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள், நட்சத்திர வேட்பாளர்கள் ஆகியோர் வேட்புமனு தாக்கல் செய்தனர்.
இறுதி நாளுக்கும் முந்தைய நாளான நேற்று பாஜக நட்சத்திர வேட்பாளர் குஷ்பு, மாநில தலைவர் எல்.முருகன், விருகம்பாக்கம் தொகுதியில் மக்கள் நீதி மய்யம் கட்சி வேட்பாளர் சினேகன், அண்ணாநகர் தொகுதியில் பொன்ராஜ், விருத்தாச்சலத்தில் பிரேமலதா விஜயகாந்த் உள்ளிட்டோர் வேட்புமனு தாக்கல் செய்தனர்.
நேற்றைய நிலவரப்படி தமிழகத்தின் 234 தொகுதிகளிலும் 3 ஆயிரத்து 293 பேர் வேட்புமனு தாக்கல் செய்திருந்தனர். அதில் ஆண்கள் 2 ஆயிரத்து 721 மனுக்களும், பெண்கள் 571 மனுக்களும் தாக்கல் செய்துள்ளனர். மதுரை தெற்கு தொகுதியில் மட்டும் திருநங்கை ஒருவரும் அடக்கம். இறுதி நாளான இன்று பல்வேறு அரசியல் கட்சி, சுயேட்சை வேட்பாளர்கள் வேட்புமனு தாக்கல் செய்த நிலையில், இன்று மாலை 3 மணியுடன் வேட்புமனு தாக்கல் நிறைவடைந்தது. தற்போதைய நிலவரப்படி 4,600க்கும் மேற்பட்டோர் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர். நாளை வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை நடைபெற உள்ளது. வேட்புமனுக்களை திரும்ப பெற மார்ச் 22ம் தேதி கடைசி நாளாகும் என்பது குறிப்பிடத்தக்கது.