ரூ.3.50 கோடி டெண்டரில் சண்டை... உட்கட்சி மோதலில் டாராக பிளந்தது திமுக நிர்வாகியின் மண்டை..!
டெண்டர் முடிந்து, மாலை 3:30 மணிக்கு அங்கிருந்து வெளியேறி விட்டேன். எனக்கும், இந்த சம்பவத்திற்கும் தொடர்பு இல்லை
சிவகங்கை மாவட்டத்தில் குடிநீர் வடிகால் வாரிய அலுவலகத்தில் குடிநீர் பராமரிப்பு பணிகளுக்கான ஒப்பந்தம் நடைபெற்றது. இந்த பணிகளுக்கான ஒப்பந்தம் எடுப்பதில் திமுகவினர் இடையே ஏற்பட்ட முதலில் திமுக நிர்வாகி ஒருவரின் மண்டை உடைந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
சிவகங்கை மாவட்டம் தொண்டி சாலையில் குடிநீர் வடிகால் வாரிய கண்காணிப்பு அலுவலகம் மற்றும் நிர்வாக பொறியாளர் அலுவலகம் ஆகியவை ஒரே கட்டிடத்தில் உள்ளன. இந்நிலையில் நேற்று நிர்வாக பொறியாளர் அலுவலகத்தில் 33 குடிநீர் பராமரிப்பு பணிகளுக்கு 3.5 கோடி ரூபாய்க்கு ஒப்பந்தம் விடப்பட்டது. இதில் நிர்வாக பொறியாளர் அலுவலகத்தில் 27 குடிநீர் பராமரிப்பு பணிகள் மற்றும் கண்காணிப்பு பொறியாளர் அலுவலகத்தில் 6 குடிநீர் பராமரிப்பு பணிகள் அடங்கும்.
டெண்டர் ஏலம் முடிந்து மாலை 4:00 மணிக்கு வெளியே வரும்போது, தி.மு.க., மாவட்ட துணைச் செயலர் சேங்கை மாறன், கோவானுார் பகுதியைச் சேர்ந்த தொகுதி அமைப்பாளர் சோமன் தரப்பினர் இடையே தகராறு ஏற்பட்டது.சேங்கை மாறன் தரப்பு தாக்கியதில், சோமனுக்கு மண்டை உடைந்து ரத்தம் கொட்டியது. சோமன் தரப்பினர், சேங்கை மாறன் தரப்பினரின் காரை தாக்கினர். போலீசார் வந்ததும், அங்கிருந்து சென்றனர்.சோமன் கூறுகையில், ''என்னை கொல்லும்படி சேங்கை மாறன் தரப்பினர் கூறியதோடு, சேங்கை மாறனும் தாக்கினார்,'' என்றார்.
சேங்கைமாறன் கூறுகையில், ''டெண்டர் முடிந்து, மாலை 3:30 மணிக்கு அங்கிருந்து வெளியேறி விட்டேன். எனக்கும், இந்த சம்பவத்திற்கும் தொடர்பு இல்லை,'' என்றார்.குடிநீர் வடிகால் வாரிய நிர்வாக பொறியாளர் ஐனான் கூறுகையில், ''சிவகங்கை, ராமநாதபுரம் கூட்டு குடிநீர் திட்ட பராமரிப்பில், 33 பணிகளுக்கான டெண்டர் நடந்தது. ''எந்த பிரச்னையும் ஏற்படாமல் டெண்டர் நிறைவு பெற்றது,'' எனத் தெரிவித்தார்.
இதில் திமுக பிரமுகர் சோமன் அவர்களின் மண்டை உடைந்ததால் அவரது தரப்பினர் ஆத்திரமடைந்து எதிர் தரப்பினரின் காரை சேதப்படுத்தினர். பின்னர் போலீசார் இருதரப்பினரையும் சமாதானம் செய்தனர். காயமடைந்த திமுக பிரமுகர் சோமன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார்.