பெண்ணியம் போற்றும் தமிழகத்தை, பெண்கள் பாதுகாப்பாக நடமாடவே முடியாத மாநிலமாக மாற்றிவிட்டீர்களே… இது உங்களை உறுத்தவில்லையா?

ராமேஸ்வரத்தில் 12ம் வகுப்பு மாணவியை வாலிபர் ஒருவர் ஒருதலை பட்சமாக காதலித்து வந்துள்ளார். இவரது காதலை பள்ளி மாணவி ஏற்க மறுத்துள்ளதாகக் கூறப்படுகிறது. இந்த நிலையில், வழக்கம் போல பள்ளிக்கு சென்று கொண்டிருந்த மாணவியை வழிமறித்த முனிராஜ், தன்னை காதலிக்குமாறு கூறி தகராறு செய்துள்ளார். ஆனால், மாணவி அதற்கு மறுப்பு தெரிவித்துள்ளார். இதனால், கோபமடைந்த முனிராஜ் தான் மறைத்து வைத்திருந்த மீன்பிடி வலை பழுதுபார்க்க உதவும் கத்தியால் மாணவியின் கழுத்தில் குத்தியுள்ளார். இதில், பலத்த காயமடைந்து சரிந்து விழுந்த மாணவி, சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.இது தொடர்பாக தகவலறிந்து வந்த போலீசார், சேராங்கோட்டையைச் சேர்ந்த முனிராஜை கைது செய்து விசாரித்து வருகின்றனர். இந்தச் சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

இந்தச் சம்பவத்தை வன்மையாக கண்டித்துள்ள எதிர்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, ‘‘ராமேஸ்வரத்தில் தன்னை காதலிக்க மறுத்த 12-ம் வகுப்பு மாணவியை இளைஞர் கத்தியால் குத்திப் படுகொலை செய்ததாக வரும் செய்தி அதிர்ச்சி அளிக்கிறது. காலை நேரத்தில் பள்ளிக்கு செல்லும் மாணவிக்குக் கூட பாதுகாப்பு இல்லாத ஒரு அவல நிலைக்கு யார் பொறுப்பு? பட்டப்பகலில் பள்ளி மாணவியைக் கொலை செய்யும் அளவிற்கு, குற்றவாளிக்கு இவ்வளவு துணிச்சல் எங்கிருந்து வந்தது?

ஸ்டாலின் மாடல் திமுக ஆட்சியில், சட்டம் ஒழுங்கையும் பெண்கள் பாதுகாப்பையும் முழுமையாக குழி தோண்டி புதைத்துவிட்டதே இத்தகைய கொடூரக் குற்றச் செயல்களுக்கு முழுமுதற் காரணம். மு.க.ஸ்டாலின் அவர்களே... உங்கள் ஆட்சியில் அடுத்த நிமிடம் பாதுகாப்பாக இருக்க முடியுமா? என்ற அச்சத்துடனே ஒவ்வொரு பொழுதையும் பெண்கள் கடக்க வேண்டிய அவலச் சூழல். தமிழ்நாட்டிற்கு தலைகுனிவு இல்லையா? இதற்கு நீங்கள் வெட்கித் தலைகுனிய வேண்டாமா?

பெண்ணியம் போற்றும் தமிழகத்தை, பெண்கள் பாதுகாப்பாக நடமாடவே முடியாத மாநிலமாக மாற்றிவிட்டீர்களே… இது உங்களை உறுத்தவில்லையா? ராமேஸ்வரம் பள்ளி மாணவியைக் கொலை செய்த குற்றவாளிக்கு உச்சபட்ச சட்டப்பூர்வ தண்டனை கிடைப்பதை உறுதி செய்யவேண்டும் என ஸ்டாலின் மாடல் திமுக அரசை வலியுறுத்துகிறேன்’’ எனத் தெரிவித்துள்ளார்.