பாஜக கூட்டத்தில் நேரு நேர்... தனியாளாய் படபடத்த இளைஞர்... பதறிப்போன அண்ணாமலை..!
சமாளித்த அண்ணாமலை அந்த இளைஞருக்கு மீண்டும் சால்வை அணிவிக்க முயன்றார். ஆனால் அதனை ஏற்க மறுத்த அந்த இளைஞரை பாஜகவினர் அப்புறப்படுத்தினர்.
தமிழக பாஜக தலைவராக பொறுபேற்க உள்ள அண்ணாமலை பங்கேற்ற கூட்டத்தில் இளைஞர் ஒருவர் தகராறில் ஈடுபட்டது பரபரப்பை ஏற்படுத்தியது.
தமிழக பா.ஜ.க., தலைவராக நியமிக்கப்பட்டுள்ள அண்ணாமலை நாளை பொறுப்பேற்க இருக்கிறார். இதற்காக அவர் கோவையில் இருந்து சாலை மார்க்கமாக சென்னை புறப்பட்டார். அவருக்கு வழிநெடுக பாஜகவினர் வரவேற்பு அளித்து வருகின்றனர்.
நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் பேருந்து நிலையத்தில் கூட்டத்தில் கலந்து கொண்டார். அப்போது பேசிய அவர், ’’தமிழகத்திலுள்ள 13 ஆயிரம் கிராமங்களுக்கும் பா.ஜ.க,வின் கொடி, கொள்கைகளை, சித்தாந்தத்தை உங்கள் ஒத்துழைப்போடு எடுத்துச் செல்ல வேண்டும். தமிழகத்தில் நான்கு சட்டசபை உறுப்பினர்களை கொண்ட நமது கட்சி ஐந்து வருடத்தில் 150 சட்டசபை உறுப்பினர்களுடன் அடுத்த தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சி அமைக்கும்’’ என பேசினார். பின்னர் அவருக்கு கட்சியினர் மரியாதை செய்தனர். கூட்டத்தில் அப்போது இளைஞர் ஒருவர் அண்ணாமலை அருகில் வந்து நான் உங்களிடம் ஒரு கேள்வி கேட்க வேண்டும் பதில் சொல்லுங்கள் எனக்கேட்டார்.
ஆனால் பாஜகவினர் அந்த இளைஞரை தடுத்து நிறுத்த முயற்சித்தனர். விடாப்பிடியாக அந்த இளைஞர் கேள்விகேட்க முயன்றார். ஆனால் அவரை தடுத்து அவருக்கு சால்வை அணிவிக்க முன்றார் அண்ணாமலை. ஆனால் அந்த இளைஞரோ அண்ணாமலையை நோக்கி, ‘’சமூக வலைதளங்களில் நீங்கள் பேசிய ஒரு வீடியோவை பார்த்தேன். அதில் நான் தமிழரல்ல. கன்னடர் எனக் கூறியிருந்தீர்கள். அப்படி சொன்ன நீங்கள் எந்த முகத்தை வைத்துக் கொண்டு வந்தீர்கள்? எனக் கேள்வி எழுப்பினார். சமாளித்த அண்ணாமலை அந்த இளைஞருக்கு மீண்டும் சால்வை அணிவிக்க முயன்றார். ஆனால் அதனை ஏற்க மறுத்த அந்த இளைஞரை பாஜகவினர் அப்புறப்படுத்தினர்.