நீட் தேர்விலிருந்து விலக்கு பெறும் உரிமை, திறன், திராணி தமிழ் நாட்டுக்கு உண்டு என்று மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் தெரிவித்தார்.
இந்திய மாணவர் சங்கம் சார்பில் திருச்சியில் நீட் எதிர்ப்பு மாநில மாநாடு நடைபெற்றது. இந்த மாநாட்டில் மதுரை எம்.பி. சு.வெங்கடேசன் பங்கேற்று பேசினார். “நீட் தேர்விலிருந்து விலக்கு பெறும் உரிமையும், திறனும், திராணியும் தமிழ் நாட்டுக்கு உண்டு. எப்போதும் போராட்டங்களே சமூக நீதியை முன்னோக்கி நகர்த்துகின்றன. நாட்டில் மக்களுக்கு வழங்கப்பட்ட ஒவ்வொரு உரிமைக்குப் பின்னணியிலும் நிச்சயம் போராட்டம் இருக்கும். நீட் தேர்வு என்பது மாநில உரிமைகளையும் கல்வி உரிமைகளையும் குத்திக் கிழிக்கிறது. வகுப்பறைகளில் கற்ற கற்பித்தலைக் கொன்றுவிட்டு, தனிப் பயிற்சி வகுப்புகளைக் கொண்டாடுவதாக உள்ளது. 
மாணவர்களின் நம்பிக்கையைச் சிதைத்து, தற்கொலைக்குத் தூண்டுவதாகவும் அமைந்திருக்கிறது. நீட் தேர்வு என்பது கல்விப் பிரச்னையோ, மருத்துவர்கள் பிரச்னையோ, மாணவர்கள் பிரச்சினையோ அல்ல. மாநில உரிமை, சுயாட்சி, கூட்டாட்சி, காலம் காலமாகக் கட்டமைக்கப்பட்டுள்ள மருத்துவ வசதி என எல்லாமுமே தொடர்புடையது. நீட் தேர்விலிருந்து விலக்கு பெறும் விவகாரத்தில் தீர்வு காணும்வரை எல்லா அரசியல் கட்சிகளும் உயிர்ப்போடு இயங்கச் செய்யும் வேலையை மாணவர் சமூகம் செய்ய வேண்டும். நீட் தேர்விலிருந்து மத்திய அரசு பின்வாங்கும்வரை தமிழ்ச் சமூகம் போராட்டத்தைக் கைவிடாது என்பதை மாணவர்கள் நிரூபிக்க வேண்டும்” என்று சு.வெங்கடேசன் பேசினார்.
மாநாட்டில், நீட் தேர்வில் விலக்கு கோரும் தமிழக சட்டப்பேரவையின் தீர்மானத்துக்குக் குடியரசுத் தலைவர் ஒப்புதல் அளிக்க வேண்டும், தேசியக் கல்விக் கொள்கையை ரத்து செய்ய வேண்டும், கல்வியை மாநிலப் பட்டியலுக்கு மாற்ற வேண்டும் உள்பட பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
