Exclusive இளங்கோவன் மீது அரசருக்கு ஆயிரம் டன் வருத்தம்: பனிப்போரை துல்லியமாக ஸ்கேன் செய்த ஏஸியாநெட் இணையதளம்...
தமிழக காங்கிரஸின் சிட்டிங் தலைவரான திருநாவுக்கரசருக்கும், மாஜி தலைவரான இளங்கோவனுக்கும் இடையில் மூண்டிருக்கும் பனிப்போரின் வளர்ச்சி மற்றும் போக்கு குறித்து நமது ஏஸியா நெட் இணைய தளம் தெளிவாக சற்று முன் கூட்டியே செய்திகளை தினமும் தந்து கொண்டிருப்பதை வாசகர்கள் அறிவீர்கள்.
இந்நிலையில் ‘அரசரின் மூவ்களுக்கு எதிராக டெல்லி தலைமையிடம் எதையாவது போட்டுக் கொடுத்து முட்டுக்கட்டை போடுவது இளங்கோவனே!’ என்று அரசர் தரப்பு கடுப்பாவதாக நேற்று நாம் எழுதியிருந்தோம். இதை அரசரே தன் வாய்மொழியாக உறுதிப்படுத்தியிருக்கிறார் பாருங்கள்...
இந்திராகாந்தி நூற்றாண்டு விழா குறித்து விவாதிக்க நேற்று சத்தியமூர்த்தி பவனில் மாவட்டத் தலைவர்கள் கூட்டம் நடத்தப்பட்டது. 72 மாவட்ட தலைவர்களில் சுமார் 12 பேர் கலந்து கொள்ளவில்லை. பழைய மாநில தலைவர்கள் என்ற முறையில் அரசராலேயே அழைக்கப்பட்ட இளங்கோவனும், தங்கபாலுவும் கலந்து கொள்ளவில்லை.
தங்கபாலு தான் வரமுடியாமல் போனதற்கான காரணத்தை சொல்லியிருந்தாராம் ஆனால் இளங்கோவன் ஏதும் சொல்லவில்லையாம். இதன் மூலமே அவர் தங்கள் தலைவர் மீது எவ்வளவு வெறுப்பிலிருக்கிறார் என்பதை தங்களால் புரிந்து கொள்ள முடிவதாக அரசரின் ஆதரவாளர்கள் கொக்கரித்தனர்.
இந்நிலையில் இவ்விழாவில் மைக் பிடித்த திருநாவுக்கரசர் “என்னைப் பற்றி எவ்வளவு வேண்டுமானாலும் விமர்சனம் செய்யட்டும். நான் முடங்கி கிடக்கிறேன், நான் நல்லவன் இல்லை என்றெல்லாம் கூட பேசட்டும். நான் அதற்கெல்லாம் கவலைப்பட மாட்டேன். ஆனால் ‘கட்சி முடங்கிக் கிடக்கிறது’ என இளங்கோவன் சொல்லும் போதுதான் எனக்கு வேதனையாக உள்ளது.” என்று ஆதங்கப்பட்டவர்,
அடுத்துப் பேசியதுதான் ஹைலைட் “என் பலம் இளங்கோவனிடம் இருக்காது, அவரது பலம் என்னிடம் இருக்காது. தனிப்பட்ட முறையில் ஒவ்வொருவருக்கும் ஒரு பலம் உண்டு. எனவே இனிமேலாவது ஒருவர் மீது ஒருவர் புகார் கூறுவதை தவிர்ப்போம், ஒழிப்போம்.” என்றார்.
ஆக அரசர் இப்படி கூறியிருப்பது தன் மீது புகார் கூறியது இளங்கோவனேதான் என்று உறுதிபட முடிவெடுத்துவிட்டதாகவே அவரது ஆதரவாளர்கள் வெளிப்படையாய் வெடிக்கின்றனர்.
இது ஒருபுறமிருக்க, பணமதிப்பிழப்பு நடவடிக்கையை மையமாக வைத்து நவம்பர் வரும் 8-ம் தேதியன்று மத்திய அரசுக்கு எதிராக போராட்டம் நடத்தும் தி.மு.க. தங்கள் கூட்டணியிலுள்ள காங்கிரஸை அழைக்காமல் தனித்தே செயல்பட போகிறதாம். இதனால் தி.மு.க.வை அழைக்காமல் தாங்கள் தனித்து போராட்டம் நடத்துவது எனும் முடிவுக்கு வந்துவிட்டாராம் அரசர்.
ஆனாலும் தங்களை கண்டு கொள்ளாத ஸ்டாலினை விட, கண்டன பொதுக்கூட்டம் தான் நடத்த முயற்சித்ததை தடுத்திருக்கும் இளங்கோவன் மீதுதான் அரசருக்கு ஆயிரம் டன் வருத்தமாம்!