அதிகப்பிரசங்கியாக செயல்பட்டிருக்கிறார் சபா: தூர்வாரும் மாஜி...
அரசியல் யாருக்கு எப்போது பொக்கே கொடுக்கும், யாரை பொடனியில் அடித்து உட்கார வைக்கும் என்பதை கணிக்கவே முடியாது.
கடந்த தி.மு.க. ஆட்சியில் துணை சபாநாயகராக இருந்தவர் வி.பி.துரைசாமி. என்னதான் அவ்வளவு பெரிய பதவியில் இருந்தவராய் இருந்தாலும் கூட ஆட்சி போன பிறகு கட்சியில் தனக்கு பெரிய, உரிய இடம் தரப்படுவதில்லை என்று அவருக்கு ஒரு வருத்தம் எப்போதுமே உண்டு.
ஆனால் திடீரென இன்று ’டாக் ஆஃப் தி டவுன் ’ ஆகியிருக்கிறார் வி.பி.துரைசாமி. சிட்டிங் சபாநாயகர் தனபாலை வெளுத்து வாங்கி அவர் வெளியிட்டிருக்கும் கமெண்ட் தி.மு.க. நிர்வாகிகளையே புருவம் உயர வைத்திருக்கிறது.
அதாவது இன்று தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் 18 பேர் தகுதி நீக்கம் செய்யப்பட்டிருக்கும் நிலையில் மாஜி துணைசபாநாயகர் எனும் முறையில் அவரிடம் கருத்து கேட்கப்பட்டபோது ‘தி.மு.க.வின் பார்வையில் தனபாலின் இந்த உத்தரவு மிக மிக தவறான நடவடிக்கை. இதை எந்த வகையிலும் அவர் நியாயப்படுத்திவிட முடியாது.
சட்டமன்றத்தின் வெளியே அவர்கள் செயல்பட்ட விஷயங்களுக்காக இப்படியொரு விதியை காரணம்காட்டி தனபால் தகுதி நீக்கம் செய்திருப்பது எந்த வகையிலும் பொருந்தாது. தகுதி நீக்கம் செய்யப்பட்டிருப்பதாக அறிவிக்கப்பட்டிருக்கும் நபர்கள் தனியாகவோ அல்லது கூட்டாகவோ நீதிமன்றத்தை நாடினால் நீதிமன்றம் நிச்சயம் ஸ்பீக்கர் தனபாலிடம் பல நுணுக்கமான கேள்விகளை கேட்கும். தான் வெளியிட்டிருக்கும் உத்தரவு தவறானது என்று திகைத்து நிற்பார் தனபால். அரசியலமைப்பு சட்டடம் இந்த நடவடிக்கையை தவறென்றே சொல்லும்.
சிம்பிளாக சொல்லப்போனால் பேரவை சபாநாயகர் தனபால் அதிகப்பிரசங்கித்தனமாக செயல்பட்டிருக்கிறார்.” என்று தூர்வாரி திட்டியிருக்கிறார்.
தனபாலை துரைசாமி இப்படி விமர்சித்திருப்பதை நுட்பமாக கவனிக்கும் அரசியல் பார்வையாளர்கள்...இருவருமே தாழ்த்தப்பட்ட சமுதாயத்தை சேர்ந்தவர்கள் என்பதை அடிக்கோடிடுகிறார்கள்.