எம்எல்ஏ பதவியை உதறி தள்ளிய லட்சுமி நாராயணன் என்.ஆர்.காங்கிரசில் இணைந்தார்.. முக்கிய பதவி வழங்கவும் திட்டம்?
புதுச்சேரியில் எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்த லட்சுமி நாராயணன், எதிர்க்கட்சி தலைவர் ரங்கசாமி முன்னிலையில் என்.ஆர்.காங்கிரஸ் கட்சியில் இணைந்தார்.
புதுச்சேரியில் எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்த லட்சுமி நாராயணன், எதிர்க்கட்சி தலைவர் ரங்கசாமி முன்னிலையில் என்.ஆர்.காங்கிரஸ் கட்சியில் இணைந்தார்.
புதுச்சேரி, ராஜ்பவன் தொகுதி காங்கிரஸ் எம்எல்ஏவாக இருந்தவர் லட்சுமிநாராயணன். மூத்த அரசியல்வாதியான இவர், அமைச்சர் உள்ளிட்ட பதவிகளை வகித்துள்ளார். முதல்வர் நாராயணசாமி தலைமையிலான ஆட்சியில் மட்டுமின்றி கட்சியிலும் தனக்கு உரிய முக்கியத்துவம் அளிக்கப்படவில்லை எனக்கூறி எம்எல்ஏ பதவியை கடந்த வாரம் ராஜினாமா செய்தார்.
அதன்பிறகு நடைபெற்ற சட்டப்பேரவை சிறப்பு கூட்டத்தில் பெரும்பான்மை இழந்து காங்கிரஸ் அரசு கவிழ்ந்தது. அப்போது, என்.ஆர். காங்கிரஸ் உள்ளிட்ட மாற்று கட்சிகளில் இணைவது குறித்து தனது ஆதரவாளர்கள், தொகுதி மக்களுடன் கலந்து பேசி முடிவெடுக்க இருப்பதாக தெரிவித்திருந்தார். இந்நிலையில், முன்னாள் அமைச்சர் லட்சுமிநாராயணன் இன்று காலை புதுச்சேரி எதிர்க்கட்சி தலைவர் ரங்கசாமி முன்னிலையில் அக்கட்சியில் இணைந்தார்.
அவருடன் முக்கிய நிர்வாகிகள் சிலரும் இணைந்துள்ளதாக கூறப்படுகிறது. வரும் தேர்தலில் ராஜ்பவன் தொகுதி என்.ஆர். காங்கிரஸ் வேட்பாளராக போட்டியிட இருக்கிறார். தொடர்ந்து அவருக்கு கட்சியில் பொதுச்செயலாளர் உள்ளிட்ட முக்கிய பதவி வழங்கப்படலாம் என்று தகவலும் வெளியாகியுள்ளன.