வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்த வழக்கு…. தமிழக முன்னாள் அமைச்சருக்கு 5 ஆண்டுகள் சிறை.. உயர்நீதிமன்றம் அதிரடி…
முன்னாள் அதிமுக அமைச்சர் சத்தியமூர்த்தி தனது வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக கூறி நடைபெற்று வந்த வழக்கில் அவருக்கு 5 ஆண்டுகள் சிறை தண்டனையும், அவரது மனைவிக்கு 2 ஆண்டுகள் சிறை தண்டனையும் விதித்து சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.
ராமநாதபுரம் மாவட்டம் கடலாடி தொகுதி எம்எல்ஏவாக இருந்தவர் சத்தியமூர்த்தி. இவர் கடந்த 1991 முதல் 1996 வரை ஜெயலலிதா தலைமையிலான அமைச்சரவையில் அமைச்சராக பணியாற்றி வந்தார்.
இவர் தனது வருமானத்துக்கு அதிகமாக 83 லட்சம் ரூபாய் சொத்து சேர்த்தாக கூறி வழக்கு பதிவு செய்யப்பட்டது. இது தொடர்பாக கீழமை நீதிமன்றத்தில் வழக்கு நடைபெற்று வந்தது. இந்த வழக்கில் சத்தியமூர்த்தி மற்றும் அவரது மனைவி சந்திரா ஆகியோரை கீழமை நீதிமன்றம் விடுவித்தது.
இதனை எதிர்த்து லஞ்ச ஒழிப்பு துறை சார்பில் சென்னை உயர்நீதிமன்றதில் மேல் முறையீடு செய்யப்பட்டது. கடந்த 10 ஆண்டுகளாக நடைபெற்று வந்த வழக்கில் இன்று தீர்ப்பு வழங்கப்பட்டது.
அதில் முன்னாள் அமைச்சர் சத்தியமூர்த்தி வருவாய்க்கு அதிகமாக சொத்து சேர்த்தது நிரூபிக்கப்பட்டுள்ளதால் அவருக்கு 5 ஆண்டுகள் சிறை தண்டனையும், 5 லட்ச ரூபாய் அபராதமும் விதித்து தீர்ப்பு அளித்தது. அவரது மனைவி சந்திராவுக்கு 2 ஆண்டுகள் சிறை தண்டனையும் 5 லட்சம் ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டது.