திருச்சி குமரன்நகரை சேர்ந்தவர் ராணி. டாக்டர். கடந்த 2011ம் ஆண்டு, அதிமுக முன்னாள் அமைச்சர் பரஞ்சோதி தன்னை 2வது திருமணம் செய்து கொள்வதாக கூறி ஏமாற்றியதாகவும், தனது பணம் மற்றும் நகையை ஏமாற்றி மோசடி செய்ததாகவும், புத்தூர் அரசு மருத்துவமனை போலீசில் புகார் செய்தார்.

அதன்பேரில் போலீசார் பரஞ்சோதி, அவரது உதவியாளர்கள் சம்பத்குமார், செல்வகுமார் ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்தனர். இந்த வழக்கு திருச்சி ஜுடிசியல் மாஜிஸ்திரேட் 4வது கோர்ட்டில் நடந்து வந்தது.
இந்நிலையில் பரஞ்சோதி உள்பட 3 பேரும் இந்த வழக்கை ரத்து செய்ய வேண்டும் என கோரி மதுரை உயர்நீதிமன்ற கிளையில் மனுதாக்கல் செய்தனர். கடந்த 29.9.2016 அன்று இந்த மனு விசாரணைக்கு வந்தபோது, பரஞ்சோதி உள்பட 3 பேரும், டாக்டர் ராணியும் மதுரை உயர்நீதிமன்ற கிளையில் ஆஜராகி இந்த வழக்கில் தாங்கள் சமாதானமாக செல்வதாக கூறி அதற்கான ஆவணங்களையும் தாக்கல் செய்தனர்.
இதை தொடர்ந்து மதுரையில் உள்ள ஒரு அனாதை ஆசிரமத்துக்கு ரூ.75ஆயிரம் நன் கொடை செலுத்தும்படி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. நன்கொடை செலுத்தப்பட்டதை தொடர்ந்து பரஞ்சோதி, சம்பத்குமார், செல்வகுமார் ஆகிய 3 பேர் மீதும் கோர்ட்டில் நடந்து வரும் வழக்கை ரத்து செய்து நீதிபதி கல்யாணசுந்தரம் உத்தரவிட்டார். கடந்த 14ம் தேதி பிறப்பிக்கப்பட்ட இந்த உத்தரவு திருச்சி நீதிமன்றத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
