ஜெயலலிதா நெருங்கிய தோழி காங்கிரஸில் ஐக்கியம்!
மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் நெருங்கிய தோழியும் முன்னாள் எம்.எல்.ஏ.வுமான பதர் சயீத் காங்கிரஸ் கட்சியில் ஐக்கியமாகிவிட்டார்.
மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் நெருங்கிய தோழியும் முன்னாள் எம்.எல்.ஏ.வுமான பதர் சயீத் காங்கிரஸ் கட்சியில் ஐக்கியமாகிவிட்டார்.
2004ஆம் ஆண்டு நடந்த நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட தன் பள்ளித் தோழியான பதர் சயீத்துக்கு ஜெயலலிதா வாய்ப்பு அளித்தார். தென் சென்னையில் போட்டியிட்ட அவர், அந்தத் தேர்தலில் டி.ஆர். பாலுவிடம் படுதோல்வியடைந்தார். இருந்தாலும் ஜெயலலிதாவுடன் நெருக்கமாக இருந்த பதர் சயீத்துக்கு வக்பு வாரியத் தலைவர் பதவி, அரசு கூடுதல் அட்வகேட் பொறுப்புகளை ஜெயலலிதா வழங்கினார். 2006ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலில் திருவல்லிக்கேணி தொகுதியில் போட்டியிட்டு பதர் சயீத் வெற்றி பெற்றார்.
2011ஆம் ஆண்டு நடந்த சட்டப்பேரவைத் தேர்தலிம் மீண்டும் போட்டியிட பதர் சயீத் ஆர்வம் காட்டிவந்தார். ஆனால், அவருக்கு தேர்தலில் போட்டியிட வாய்ப்பு கிடைக்கவில்லை. மன வருத்தத்தில் இருந்த பதர் சயீத், 2014ஆம் ஆண்டு நடந்த நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடவும் வாய்ப்புக் கேட்டார். அப்போதும் அவருக்கு வாய்ப்பு கிடைக்காததால், அதிமுகவிலிருந்து விலகி ஆம் ஆம்தி கட்சியில் இணைந்தார்.
தமிழகத்தில் அரசியல் செய்யும் அளவுக்கு பெரிய வாய்ப்பு கிடைக்காததால், அரசியலிலிருந்து ஒதுங்கியே இருந்தார் பதர் சயீத். இந்நிலையில் இன்று காங்கிரஸ் கட்சியில் பதர் சயீத் இணைந்திருக்கிறார். மாநில தலைவர் திருநாவுக்கரசர் முன்னிலையில் இன்று காங்கிரஸ் கட்சியில் பதர் சயீத் இணைந்தார். இதனையத்து மாநில செய்தி தொடர்பாளர் பதவியும் அவருக்கு வழங்கப்பட்டிருக்கிறது.