கடந்த 15ம் தேதி ஈவிகேஎஸ். இளங்கோவனுக்கு திடீரென நெஞ்சு வலி ஏற்பட்டதை அடுத்து சென்னை போரூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. 

ஈரோடு கிழக்கு தொகுதி எம்.எல்.ஏ. ஈவிகேஎஸ் இளங்கோவன் சுவாசக்கோளாறு மற்றும் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்த நிலையில் மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் ஆகி வீடு திரும்பினார். 

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் திமுக கூட்டணி சார்பாக போட்டியிட்ட ஈவிகேஎஸ். இளங்கோவன் சுமார் 60 ஆயிரம் வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்று எம்எல்ஏவாக பொறுப்பேற்றுக்கொண்டார். இந்நிலையில், கடந்த 15ம் தேதி ஈவிகேஎஸ். இளங்கோவனுக்கு திடீரென நெஞ்சு வலி ஏற்பட்டதை அடுத்து சென்னை போரூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. அவரது ரத்த மாதிரிகளை பரிசோதனை செய்யப்பட்டதில் அவருக்கு கொரோனா இருப்பது உறுதியானது. 

இதனையடுத்து, தனிமைப்படுத்தப்பட்டு தனிவார்டில் வைத்து அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. பின்னர், கொரோனா மீண்ட பிறகும் மூச்சு திணறல் காரணமாக தீவிர சிகிச்சை பிரிவிலேயே அனுமதிக்கப்பட்டு மருத்துவர்கள் கண்காணிப்பிலேயே இருந்து வந்தார். இதைத்தொடர்ந்து அவரது உடல் நிலை சீரானதை அடுத்து சாதாரண வார்டுக்கு மாற்றப்பட்டார். 

மருத்துவமனை தரப்பில் இன்னும் ஓரிரு நாட்களில் ஈவிகேஎஸ்.இளங்கோவன் வீடு திரும்புவார் என தகவல் தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில், ஈவிகேஎஸ் இளங்கோவன் குணமடைந்ததை அடுத்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு வீடு திரும்பினார்.