நாக்கை அடக்கவில்லை என்றால் நடமாட முடியாது: எச்.ராஜாவுக்கு ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் எச்சரிக்கை!
பாஜக தேசிய செயலாளர் எச்.ராஜா, அண்மை காலமாக, கடுமையான வார்த்தைகளால் பலரையும் விமர்சித்து சர்ச்சைக்குரிய கருத்துக்களை வருகிறார்.
அவரது பேச்சு, அரசியல் தலைவர்கள் மற்றும் பொதுமக்களின் மத்தியில் கடும் கண்டனத்திற்கு ஆளாகி வருகிறது.
பாஜக வுக்கு எதிரான கருத்து கொண்டவர்கள் அனைவரையும், தேச துரோகி என்றும் சமூக விரோதி என்றும் அவர் தொடர்ந்து கூறி வருகிறார்.
நெடுவாசல் போராட்டத்தில் சமூக விரோதிகள் ஊடுருவி இருப்பதாக சொல்லி கடும் கண்டனத்திற்கு ஆளானார்.
கேள்வி கேட்ட பத்திரிகையாளர் ஒருவரையும் அவர் தேச துரோகி என்றார். அவர் செலுத்திய வரியையும் திருப்பி தருகிறேன் என்றார்.
காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியை வெள்ளைக்காரி என்றும், இத்தாலிகாரி என்றும் கூறியதால், தமிழக காங்கிரஸ் கட்சியினர் அவரது உருவ பொம்மையை ஆங்காங்கே எரித்தனர்.
அதையடுத்து, டெல்லியில், நாற்பது நாட்களுக்கும் மேல் போராடிய விவாசாய சங்க பிரதிநிதி அய்யாக்கண்ணுக்கும், தீவிரவாதிகளுக்கும் தொடர்பு இருப்பதாக கூறி கடும் கண்டனத்திற்கு ஆளானார்.
இந்நிலையில், திருச்சியில் நேற்று செய்தியாளர்களிடம் பேசிய, தமிழக காங்கிரஸ் முன்னாள் தலைவர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன், நாவடக்கம் இன்றி எச்.ராஜா பேசிக்கொண்டிருந்தால் நடைமுடியாத நிலை ஏற்படும் என்று எச்சரிக்கை விடுத்துள்ளார்.