யாரோ ஒருவர் முழங்கால் அளவு கூட இல்லாத தண்ணீரில் படகு ஓட்டுகிறார். 

யாரோ ஒருவர் முழங்கால் அளவு கூட இல்லாத தண்ணீரில் படகு ஓட்டுகிறார் என்று பொதுப்பணித் துறை அமைச்சர் எ.வ.வேலு தெரிவித்துள்ளார்.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அலுலகக் கூட்டரங்கில் சாலைப் பாதுகாப்பு குறித்த ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் தமிழக பொதுப்பணித் துறை அமைச்சர் எ.வ.வேலு பங்கேற்றார்.

பின்னர் அவர் செய்தியாளர்களிடம் பேசும்போது, ''யாரோ ஒருவர் முழங்கால் அளவு கூட இல்லாத தண்ணீரில் படகு ஓட்டுகிறார். விழுப்புரம் மாவட்டத்தில் மழை வெள்ளத்தால் பழுடைந்த தடுப்பணை கடந்த அதிமுக ஆட்சியில் கட்டப்பட்டது. தரமான தடுப்பணை கட்டியிருந்தால் எவ்வித பிரச்சினையும் இருக்காது. தரமில்லாமல் கட்டியிருந்தால் சம்பந்தப்பட்ட ஒப்பந்ததாரர் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.

விபத்தைத் தடுக்கக் கல்வித் துறை மூலம் மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதைப் பாடத்திட்டத்தில் கொண்டுவர முதல்வர் கவனத்திற்குக் கொண்டு செல்லப்படும். கன்னியாகுமரி - சென்னை தொழில் வழித்தடச் சாலையில் 16 இடங்களில் திட்ட மதிப்பீடு போடப்பட்டு பணிகள் நடைபெற்று வருகின்றன. 

எதிர்க்கட்சியினர் அரசியல் செய்ய முதலமைச்சர் ஸ்டாலின் வாய்ப்பே கொடுப்பதில்லை. ஏற்கனவே சென்னை மாநகர மேயராக இருந்த காரணத்தால் மழை வெள்ள பாதிப்புகளை முதலமைச்சரே அதிகாரிகளிடம் நேரடியாக பேசி விடுகிறார்.

ஊடகங்களில் ஏதாவது பேச வேண்டுமே என்பதற்காக அரசியல் காழ்ப்புணர்ச்சியால் அரசு மீது அவர் குற்றஞ்சாட்டி வருகின்றனர். இணைப்புச் சாலைகளில் தண்ணீர் தேங்கத் தான் செய்யும். அதனை எப்படி வெளியேற்றுகிறோம் என்பதே என்பதே முக்கியம்.

சென்னையின் பல்வேறு இடங்களில் இணைப்பு சாலைகளில் தேங்கி நின்ற மழை நீர் இரண்டே மணி நேரத்தில் வடிய வைக்கப்பட்டது. தமிழகத்தில் சாலைகளை விரிவுப்படுத்துவது தவிர்க்க முடியாதது. இந்தப் பணிகளுக்காக மரங்கள் வெட்டப்பட்டால் அப்படியே விட்டுவிடமாட்டோம். சாலை விரிவாக்கப் பணிகளுக்கு வெட்டப்பட்ட மரங்களுக்கு பதிலாக புதிதாக மரக்கன்றுகளை நட வேண்டும் என முதலமைச்சர் ஸ்டாலின் ஏற்கனவே தங்களுக்கு அறிவுறுத்தியிருக்கிறார். மழைக்காலம் முடிந்த பின்னர் தமிழகம் முழ்வதும் சாலைகள் பழுது நீக்கப்படும்.

தமிழகம் முழுவதும் பெய்து வரும் கனமழையால் பல்லாயிரம் கிலோ மீட்டர் சாலைகள் பழுதடைந்திருப்பது குறிப்பிடத்தக்கது. இதன் சேத மதிப்புகளை ஆராய்ந்து மழைக்காலத்திற்கு பிறகு சாலை செப்பனிப்படப்படும் என்ற அமைச்சரின் தகவல் முக்கியத்துவம் வாய்ந்தது.