ஆளும் கட்சியே இடையூறு தந்தாலும் நாளை மறுநாள் ஆர்ப்பாட்டம் நடக்கும் - செந்தில்பாலாஜி உறுதி...
கரூர்
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய, மாநில அரசுகளை கண்டித்து 18-ஆம் தேதி நடைபெற உள்ள ஆர்ப்பாட்டத்திற்கு எந்தவித இடையூறுகள் வந்தாலும் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்று முன்னாள் அமைச்சர் செந்தில்பாலாஜி தெரிவித்தார்.
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய, மாநில அரசுகளைக் கண்டித்து அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் சார்பில் கரூரில் பேருந்து நிலையம் அருகே வருகிற 18-ஆம் தேதி (புதன்கிழமை) காலை 10 மணிக்கு டி.டி.வி.தினகரன் எம்.எல்.ஏ. தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது.
இந்த ஆர்ப்பாட்டம் தொடர்பாக நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் நேற்று கரூரில் சின்ன கொங்கு மண்டபத்தில் நடந்தது.
இந்தக் கூட்டத்தில் மாவட்டச் செயலாளரும், முன்னாள் அமைச்சருமான செந்தில்பாலாஜி சிறப்பு விருந்தினராக பங்கேற்றார்.
அப்போது அவர் பேசியது: "தகுதி நீக்கம் செய்யப்பட்ட 18 எம்.எல்.ஏ.க்கள் மீதான வழக்கில் நல்ல தீர்ப்பு வரும். டி.டி.வி.தினகரன் தலைமையில் சட்டமன்றத்திற்கு நாங்கள் செல்லும்போது முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியும், அவரது அமைச்சர்களும் விரைவில் வீட்டுக்கு செல்வார்கள்.
பா.ஜ.க.வுடன் ஒரு போதும் கூட்டணி கிடையாது என டி.டி.வி. தினகரன் அறிவித்துள்ளார். தமிழக மக்களின் உரிமைகளையும், வாழ்வாதாரத்தையும் காப்பாற்ற டி.டி.வி. தினகரன் தலைமையில் ஆட்சி அமையும்.
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய, மாநில அரசுகளை கண்டித்து 18-ஆம் தேதி நடைபெற உள்ள ஆர்ப்பாட்டத்திற்கு இடையூறு ஏற்படுத்த இருப்பதாக கூறப்படுகிறது. எந்தவித இடையூறு ஏற்படுத்தினாலும், அனுமதி மறுத்தாலும் தடையை மீறி ஆர்ப்பாட்டம் நடத்தப்படும்.
கரூர் மாவட்டத்திற்கு பாராளுமன்ற துணை சபாநாயகர் தம்பிதுரை எந்த திட்டத்தையும் கொண்டுவரவில்லை. அவர் வருகிற தேர்தலில் போட்டியிட்டாலும் வெற்றி பெற முடியாது" என்று அவர் பேசினார்.
இந்தக் கூட்டத்தில் நிர்வாகிகள் எஸ்.பி.லோகநதான், தாரணி சரவணன், சுப்ரமணி, கோல்டு ஸ்பார்ட் ராஜா, காதப்பாறை முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் தங்கவேல் உள்பட பலர் பங்கேற்றனர்.