100 நாள்கூட ஆகல...40 சதவீத தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றிட்டோம்.. காலரைத் தூக்கிவிடும் சேகர்பாபு..!
திமுக பதவியேற்று இன்னும் நூறு நாட்கள்கூட முடியவில்லை. அதற்குள் மக்களுக்கு அளித்த தேர்தல் வாக்குறுதிகளில் 40 சதவீதத்தை நிறைவேற்றிய மாநிலம் என்றால் அது தமிழகம்தான் என்று தமிழக அறநிலையத் துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு தெரிவித்துள்ளார்.
சென்னையில் அமைச்சர் சேகர்பாபு செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், “திமுக பதவியேற்று இன்னும் நூறு நாட்கள்கூட முடியவில்லை. அதற்குள் மக்களுக்கு அளித்த தேர்தல் வாக்குறுதிகளில் 40 சதவீதத்தை நிறைவேற்றிய மாநிலம் என்றால் அது தமிழகம்தான். கடந்த 10 ஆண்டுகளில் சொல்ல முடியாத பல துயரங்களையும் கஷ்டங்களையும் மக்களுக்காக தாங்கி நின்றவர் முதல்வர். களத்தில் மக்களுக்காக வாதாடி போராடி சாதித்தவரும் முதல்வர்தான். மக்கள் உரிமைகளுக்காக குரல் கொடுத்து மக்களின் அளவிடமுடியாத பொருளாதார இழப்பிற்கு ஆளாகி எந்த வகையிலும் பயனில்லாத ஓர் ஆட்சியை அகற்ற பாடுபட்ட இயக்கம்தான் திமுக.
கடந்த 10 ஆண்டுகளில் ஏற்பட்ட துன்பங்கள் மாறி இன்பத்தைக் காண வேண்டிய சூழலில்தான் நமக்கு ஆட்சி அதிகாரம் கைக்கு வந்தது. முதல்வர் ஸ்டாலின் ஆட்சி அமைத்தவுடன் உயிர்க்கொல்லி நோயான கொரொனாவை எதிர்கொள்ள வேண்டிய சூழல் உருவாகியது. ஆட்சி அதிகாரம் கைக்கு வந்தும் பதவியேற்று விழாவை ஒரு சம்பிரதாயத்துக்கு நடத்திவிட்டு உடனே மக்கள் பணியில் ஈடுபட்டு சிறப்பாகபணி செய்துவருகிறார் முதல்வர்” என்று சேகர்பாபு தெரிவித்தார்.