எதிர்கட்சிகள் முன் வைக்கும் குற்றச்சாட்டுகளுக்கு அமைச்சர்கள் பதிலளிக்கும் போது எதிர்க்கட்சிகள் அவையில் இருப்பதில்லை என அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேசியதால் அவையில்  எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி சபாநாயகர் அப்பாவு இடையே காரசாரமான விவாதம் நடந்தது.  

வரிக்கு வரி பதில்

தமிழக சட்டப்பேரவையில் இன்று மக்கள் நல்வாழ்வு துறை மானியக்கோரிக்கை மீதான விவாதத்தில் அதிமுக சார்பில் விஜயபாஸ்கர் பேசினார்.அப்போது எதிர்கட்சிகளின் கேள்விக்களுக்கு அமைச்சர்கள் உரிய பதில் அளிப்பதில்லையென தெரிவித்தார். அப்போது குறுக்கிட்ட அமைச்சர் மா.சுப்பிரமணியன், எதிர்க்கட்சி உறுப்பினர்கள் பேசுவதற்கு அனைத்து வகையிலும் பதிலளிக்க தயாராக வந்துள்ளோம். ஆனால் இறுதியில் அமைச்சர்கள் பதிலளிப்பதை கேட்க எதிர்க்கட்சிகள் அவையில் இருப்பதில்லை என தெரிவித்தார். இருந்த போதும் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் பேசுவதற்கு வரிக்கு வரி பதில் வழங்கி வருவதாக கூறினார். அப்போது குறிக்கிட்டு பேசிய எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி, எதிர்க்கட்சி குறித்து வேண்டுமென்றே அமைச்சர் அவதூறாக பேசுகிறார்.

நேரலை செய்யாதது ஏன்.?

அமைச்சர்கள் பேசுவதை நேரலையில் வழங்குவதை போல எதிர்க்கட்சி பேசுவதை நேரலை வழங்க வேண்டும். ஜனநாயக முறைப்படி கேட்கிறோம். அதை ஏன் செய்ய மறுக்கிறீர்கள் என கேள்வி எழுப்பினார். அதற்கு பதிலளித்த சபாநாயகர், அதிமுக ஆட்சியிலும் எதிர்கட்சி தலைவர் பேசிய ஒளிப்பதிவை கொடுத்ததில்லை. தற்போது கேள்வி நேரம் மட்டுமே நேரலை செய்யப்படுகிறது. மேலும் 110 விதி , முக்கிய தீர்மானங்களும் நேரலை செய்கிறோம். இதில் எந்த பாராபட்சமும் இல்லை. நேரமில்லா நேரத்தில் பேசுவதை நேரலை செய்வது சாத்தியமில்லை என கூறினார். தொடர்ந்து பேசிய எடப்பாடி பழனிசாமி, மானிய கோரிக்கை மீதான விவாதத்தில் அதிமுக உறுப்பினர் பேசுவதை கூட நேரலை செய்வதில்லை.

பேசி தீர்வு காணலாம்

ஆனால் அமைச்சர் பதில்கள் மட்டுமே வருகிறது.எதிர்கட்சி உறுப்பினர்கள் என்ன கேள்வி கேட்கிறார்கள் என மக்களுக்கு தெரிய வேண்டாமா? அதை காட்டினால் தானே மக்களுக்கு புரியும் என கோரினார். அதற்கு பதிலளித்த சபாநாயகர், மானிய கோரிக்கை விவாதத்தில் ஆளும் கட்சி உறுப்பினர்கள் பேசுவதையும் நேரலை செய்யவில்லை என கூறினார். தொடர்ந்து பேசிய எடப்பாடி பழனிசாமி, கொள்கை விளக்க குறிப்பில் உள்ளதை தான் உறுப்பினர்கள் பேசுகிறார்கள். அதை நேரலையில் தருவதில் என்ன பிரச்சனை என கேட்டார். அதற்கு பதிலளித்த சபாநாயகர், நேரலை செய்வதில் பிரச்சனை உள்ளது. பேசி தீர்வு காணலாம் என கூறினார்.

எதிர்கட்சி தலைவர் பேசுவரை நேரலை செய்திடுக

அவரை தொடர்ந்து பேசிய எதிர்க்கட்சி கொறடா வேலுமணி: கடந்த காலத்தில் எதிர்க்கட்சிகளும் அவையை புறக்கணித்துள்ளது. குறைந்தபட்சம் எதிர்க்கட்சி தலைவர் பேசுவதை மட்டுமாவது நேரலை செய்ய முன்வர வேண்டும் என கேட்டார். தொடர்ந்து பேசிய சபாநாயகர் நான் எந்த உத்தரவாதமும் தரவில்லை. இந்த விவகாரத்தை பேசி தீர்வு காணலாம் என கூறி விவாதத்திற்கு முற்றுப்புள்ளி வைத்தார்.