ஓபிஎஸ் ஆதரவு எம்.பி.யை கட்சியை விட்டு நீக்காத இபிஎஸ்.. ஓபிஎஸ்ஸுக்கு டாடா காட்டினாரா ஆர். தர்மர்.?
ஓபிஎஸ் ஆதரவாளராக அறியப்படும் மாநிலங்களவை எம்.பி. ஆர். தர்மர் எடப்பாடி பழனிச்சாமி பக்கம் சாய்ந்துவிட்டாரா என்ற கேள்வி எழுந்துள்ளது.
அதிமுகவில் ஒற்றை தலைமை விவகாரத்தில் ஓபிஎஸ் - இபிஎஸ் இடையே விரிசல் ஏற்பட்டது. சென்னையில் நடைபெற்ற அதிமுக பொதுக்குழு கூட்டத்தின் மூலம் தற்போது எடப்பாடி பழனிச்சாமி இடைக்கால பொதுச்செயலாளராகப் பதவியேற்றுவிட்டார். பொதுச்செயலாளர் பதவியேற்றவுடன் ஓபிஎஸ், வைத்திலிங்கம், மனோஜ் பாண்டியன், ஜெ.சி.டி. பிரபாகர் ஆகியோரை கட்சியைவிட்டு நீக்க பொதுக்குழு கூட்டத்தில் தீர்மானம் கொண்டு வரப்பட்டது. மேலும் ஓபிஎஸ்ஸின் மூத்த மகனும் தேனி எம்.பி.யுமான ஓ.பி. ரவீந்திரநாத், இளைய மகன் ஜெயபிரதீப் உள்பட 17 பேரை கட்சியை விட்டு எடப்பாடி பழனிச்சாமி நேற்று நீக்கினார். இதற்குப் பதிலடியாக ஓபிஎஸ் எடப்பாடி பழனிச்சாமி, கே.பி. முனுசாமி, திண்டுக்கல் சீனிவாசன் உள்பட 22 பேரை நீக்கி அறிவிப்பு வெளியிட்டார்.
இந்நிலையில் இன்றும் ஓ. பன்னீர்செல்வமும் எடப்பாடி பழனிச்சாமியும் மாறி மாறி கட்சி நிர்வாகிகளை கட்சியிலிருந்து நீக்கி தனித்தனியாக அறிவிப்பு வெளியிட்டுள்ளனர். ஓபிஎஸ்ஸும் இபிஎஸ்ஸும் தனித்தனியாக நீக்க அறிவிப்புகளை வெளியிட்டு வரும் நிலையில், மக்களவையில் அதிமுகவிற்கான இடம் ஒன்றும் இல்லாமல் போயிருக்கிறது. அதிமுகவுக்கு மக்களவையில் ஓரிடம் மட்டுமே இருந்தது. 2019 நாடாளுமன்றத் தேர்தலில் தேனி தொகுதியில் ஓ. பன்னீர்செல்வத்தின் மகன் ஓ.பி. ரவீந்திரநாத் வெற்றி பெற்றதன் மூலம் அந்த ஒரிடம் கிடைத்தது. தற்போது ஓபிஎஸ் மகனை கட்சியை விட்டு நீக்கியிருப்பதன் மூலம் அக்கட்சிக்கு ஓரிடமும் இல்லாமல் போயிருக்கிறது.
இதையும் படிங்க: ஏட்டிக்கு போட்டியா செயல்படுவதால் எந்த பயனும் இல்லை... ஓபிஎஸ்-ஐ சாடிய செல்லூர் ராஜு!!
மாநிலங்களவையில் அதிமுகவுக்கு 4 எம்.பி.க்கள் உள்ளனர். தம்பித்துரை, சி.வி. சண்முகம், ஆர். தர்மர், சந்திரசேகரன் ஆகியோர் எம்.பி.க்களாக இருக்கிறார்கள். இதில் ஆர். தர்மர், ஓ. பன்னீர்செல்வத்தின் ஆதரவாளர் ஆவார். தற்போது அதிமுகவில் ஒற்றைத் தலைமை விவகாரம் பெரிதாகப் பேசப்பட்டு, விரிசல் ஏற்படும் அளவுக்கு சென்றதற்கு முக்கிய காரணமே மாநிலங்களவைத் தேர்தல்தான். தன்னுடைய ஆதரவாளர் ஆர். தர்மருக்கு எம்.பி. பதவியைப் பெற்று தர வேண்டும் என்பதற்காக ஓபிஎஸ் அதிரடி காட்டி காரியம் சாதித்தார். இதனால், எம்.பி. பதவி கிடைக்காமல் போனவர்கள் மூலமே ஒற்றைத் தலைமை விவகாரம் பூதாகரமானதாகக் கூறப்பட்டது.
இதையும் படிங்க: ஓபிஎஸ் செய்தது செம காமெடியாக உள்ளது... முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கிண்டல்!!
ஓபிஎஸ்ஸின் மூலம் அந்தப் பதவியைப் பெற்ற ஆர். தர்மர் அவருடைய அணியில்தான் இருந்து வருவதாகக் கூறப்பட்டது. ஆனால், ஓ. பன்னீர்செல்வத்தின் ஆதரவாளர்களை எடப்பாடி பழனிச்சாமி தொடர்ந்து நீக்கி வரும் நிலையில், ஆர், தர்மரை மட்டும் கட்சியிலிருந்து நீக்காதது ஏன் என்ற கேள்வியை எழுப்பியிருக்கிறது. ஓ. பன்னீர்செல்வத்தின் ஆதரவாளர்கள் 17 பேரை நேற்று எடப்பாடி பழனிச்சாமி நீக்கிய நிலையில், இன்று 21 பேரை நீக்கி நடவடிக்கை எடுத்தார். ஆனால், இரண்டு முறை நடந்த நீக்கத்திலும் ஆர். தர்மர் பெயர் இடம் பெறவில்லை. அப்படியெனில் ஆர். தர்மர் எடப்பாடி பழனிச்சாமி பக்கம் தாவி விட்டாரா என்ற கேள்வி இயல்பாக எழுகிறது. ஜூலை 11 பொதுக்குழுவுக்கு முன்பாகவே ஆர். தர்மரை தங்கள் பக்கம் இழுக்க எடப்பாடி பழனிச்சாமி தரப்பு அவருடன் பேச்சுவார்த்தை நடத்தியதாக தகவல்கள் வெளியாயின.
தற்போது ஓபிஎஸ் ஆதரவாளர்கள் தொடர்ந்து நீக்கப்படும் நிலையில், அவர் எடப்பாடி பழனிச்சாமி பக்கம் தாவி விட்டதால், அவரை நீக்கவில்லை என்றும் அதிமுகவில் கூறப்படுகிறது. கடந்த 2017-ஆம் ஆண்டில் ஓபிஎஸ் தர்மயுத்தம் நடத்தியபோது அவருடைய பக்கம் நின்றவர் ஆர். தர்மர். அப்போதிருந்து ஓபிஎஸ் பக்கம்தான் ஆர். தர்மர் இருந்து வருவதாகக் கூறப்பட்டது. ஆனால், அவரை எடப்பாடி பழனிச்சாமி நீக்காததன் மூலம் அவரை ஓபிஎஸ்ஸிடமிருந்து இபிஎஸ் பக்கம் கொண்டு வந்துவிட்டதாகவே பார்க்கப்படுகிறது.
இதையும் படிங்க: பொன்னையனுக்கு வேட்டு வைத்த நாஞ்சில் கோலப்பனுக்கு எடப்பாடி ஆப்பு ... ஓபிஎஸ் ஆதரவாளர்கள் இன்றும் நீக்கம்.