மக்களுக்கு சிரமம் கொடுத்த இ-பாஸ் முறை ரத்து... அதிரடி அறிவிப்பை வெளியிட்ட முதல்வர்..!
புதுச்சேரியில் இருந்து பிற மாநிலங்களுக்குச் செல்லவும், புதுச்சேரி வருவதற்கும் இனி இபாஸ் தேவையில்லை என புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
புதுச்சேரியில் இருந்து பிற மாநிலங்களுக்குச் செல்லவும், புதுச்சேரி வருவதற்கும் இனி இபாஸ் தேவையில்லை என புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
கொரோனாவை கட்டுப்படுத்த மார்ச் 25ம் தேதியிலிருந்து கொரோனா ஊரடங்கு அமலில் இருந்தது. மே மாத இறுதி வரை பொதுமுடக்கம் அமலில் இருந்த நிலையில், அதன்பின்னர் கொஞ்சம் கொஞ்சமாக தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன. ஏற்கனவே 2 கட்ட தளர்வுகள் செய்யப்பட்டிருந்த நிலையில், 3ம் கட்ட தளர்வுகளை மத்திய அரசு வெளியிட்டுள்ளது. அதன்படி, ஆகஸ்ட் 1ம் தேதி முதல் மாநிலத்திற்கு உள்ளேயும் மாநிலங்களுக்கு இடையேயும் தனிநபர்கள் மற்றும் சரக்கு வாகனங்கள் இ-பாஸ் இல்லாமல் பயணிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனாலும், மாவட்டம் விட்டு மாவட்டம் செல்வதற்கு இபாஸ் கட்டாயம் என்று தமிழக அரசு கூறியிருந்தது.
இந்த சூழலில் மாநிலங்களுக்கு உள்ளேயும் மாநிலங்களுக்கு இடையிலான போக்குவரத்துக்கும் பல்வேறு மாநில அரசுகள் கெடுபிடிகள் விதித்து வருவதாக புகார்கள் தொடர்ந்து எழுந்தது. இதனையடுத்து, அனைத்து மாநில மற்றும் யூனியன் பிரதேச தலைமைச் செயலர்களுக்கும் மத்திய உள்துறை செயலர் அஜய் பல்லா கடிதம் எழுதினார்.
அதில், மாநிலங்களுக்கு உள்ளும் மாநிலம் விட்டு மாநிலம் பயணிக்கவும் தடைகள் கூடாது என மத்திய அரசின் தளர்வு வழிகாட்டுதல்களில் தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளது. சரக்கு மற்றும் மக்கள் போக்குவரத்தில் கட்டுப்பாடுகள் விதிப்பதால் பொருளாதார நடவடிக்கைகள் மற்றும் வேலை வாய்ப்புகளில் பாதிப்பு ஏற்படுகின்றன. எனவே மாநிலம் விட்டு மாநிலம் பயணிக்க சிறப்பு அனுமதி, இ-பாஸ் போன்றவை தேவையில்லை. மாநில அரசின் கட்டுப்பாடுகள், மத்திய அரசின் வழிகாட்டு நெறிமுறைகளுக்கு முரணானது என்று தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் மத்திய அரசின் உத்தரவுப்படி புதுச்சேரியில் இ-பாஸ் நடைமுறை ரத்து செய்யப்படுவதாக அம்மாநில முதல்வர் அறிவித்துள்ளார். இதன்மூலம் புதுச்சேரியில் இருந்து பிற மாநிலங்களுக்குச் செல்லவும், புதுச்சேரி வருவதற்கும் இனி இபாஸ் தேவையில்லை என்று புதுச்சேரி அரசு தெரிவித்துள்ளது.