தமிழகத்தில் இ-பாஸ் நடைமுறை ரத்தா? அமைச்சர் ஜெயக்குமார் அதிரடி சரவெடி விளக்கம்..!
மாநிலங்களுக்கு இடையே தனிநபர்கள் இபாஸ் இல்லாமல் செல்லலாம் என்பது பற்றி முதல்வர் ஆலோசித்து முடிவு எடுப்பார் என மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் கூறியுள்ளார்.
மாநிலங்களுக்கு இடையே தனிநபர்கள் இபாஸ் இல்லாமல் செல்லலாம் என்பது பற்றி முதல்வர் ஆலோசித்து முடிவு எடுப்பார் என மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் கூறியுள்ளார்.
கொரோனாவை கட்டுப்படுத்த மார்ச் 25ம் தேதியிலிருந்து கொரோனா ஊரடங்கு அமலில் இருந்தது. மே மாத இறுதி வரை பொதுமுடக்கம் அமலில் இருந்த நிலையில், அதன்பின்னர் கொஞ்சம் கொஞ்சமாக தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன. ஏற்கனவே 2 கட்ட தளர்வுகள் செய்யப்பட்டிருந்த நிலையில், 3ம் கட்ட தளர்வுகளை மத்திய அரசு வெளியிட்டுள்ளது.
அதன்படி, ஆகஸ்ட் 1ம் தேதி முதல் மாநிலத்திற்கு உள்ளேயும் மாநிலங்களுக்கு இடையேயும் தனிநபர்கள் மற்றும் சரக்கு வாகனங்கள் இ-பாஸ் இல்லாமல் பயணிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. பொதுமுடக்கம் அமல்படுத்தப்பட்டதில் இருந்து பயணம் மேற்கொள்ள இ பாஸ் வாங்குவது கட்டாயமாக இருந்த நிலையில், ஆகஸ்ட் ஒன்று முதல், தனிநபர்கள் மற்றும் சரக்கு போக்குவரத்துக்கு இ பாஸ் தேவையில்லை என்று மத்திய அரசு அறிவித்துள்ளது. ஆனாலும், மாவட்டம் விட்டு மாவட்டம் செல்வதற்கு இபாஸ் கட்டாயம் என்று தமிழக அரசு கூறியிருந்தது. தமிழகத்தைத் தவிர பிற மாநிலங்கள் எல்லாம் இந்த நடைமுறையை ரத்து செய்துவிட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்நிலையில், மாநிலங்களுக்கு இடையே, மாநிலத்துக்குள் பயணிக்க எந்த கட்டுப்பாடும் விதிக்கக் கூடாது. பயணத்துக்கென தனியாக அனுமதி, ஒப்புதல், இ-பாஸ் போன்றவை கூடாது என அனைத்து மாநில தலைமைச் செயலர்களுக்கும் உள்துறை செயலர் இன்று கடிதம் அனுப்பியுள்ளார். இது தொடர்பாக மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமாரிடம் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர் மாநிலங்களுக்கு இடையே தனிநபர்கள் இபாஸ் இல்லாமல் செல்லலாம் என்பது பற்றி முதல்வர் ஆலோசித்து முடிவு எடுப்பார் என்று கூறினார்