இரட்டை இலை சின்னம் தொடர்பான வழக்கில் ஏப்ரல் 21 ஆம் தேதி மீண்டும் ஆஜராக டிடிவி தினகரனுக்கு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியுள்ளது. 

இரட்டை இலை சின்னம் தொடர்பான வழக்கில் ஏப்ரல் 21 ஆம் தேதி மீண்டும் ஆஜராக டிடிவி தினகரனுக்கு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியுள்ளது. முன்னாள் முதல்வரும் அதிமுக பொதுச் செயலாளருமான ஜெயலலிதா, கடந்த 2016 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 5 ஆம் தேதி, சென்னை தனியார் மருத்துவமனையில் உடல்நலக் குறைவு காரணமாக உயிரிழந்தார். அவரது மறைவை அடுத்து, அதிமுக இரண்டாக பிளவுபட்டது. சசிகலா தலைமையில் ஓரு அணியும், ஓ.பன்னீர்செல்வம் தலைமையில் ஓரு அணியும் உருவானது. இதை அடுத்து, சொத்து குவிப்பு வழக்கில் சசிகலா சிறைக்குச் சென்றதை அடுத்து, அவரது அணியில் இருந்த எடப்பாடி பழனிசாமி முதலமைச்சராக பதவி ஏற்றார். ஓ.பன்னீர்செல்வம் தரப்பும், எடப்பாடி பழனிசாமி தரப்பும், ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் இரட்டை இலை சின்னத்திற்கு உரிமை கோரியதால், அந்த சின்னத்தை முடக்கி இந்திய தலைமைத் தேர்தல் ஆணையம் உத்தரவிட்டது.

இதைத் தொடர்ந்து, இரட்டை இலை சின்னத்தை தனது கட்சிக்கு பெற, தேர்தல் ஆணைய அதிகாரிகளுக்கு பல கோடி ரூபாய் லஞ்சம் தர, எடப்பாடி பழனிசாமி அணியில் இருந்த டிடிவி தினகரன் முன்வந்தது தெரிய வந்தது. தேர்தல் ஆணையத்திடம் முறைகேடான முறையில் சின்னத்தை மீட்க, கர்நாடக மாநிலம் பெங்களூரைச் சேர்ந்த சுகேஷ் சந்திரசேகரிடம், டிடிவி தினகரன் அணியினர் பேரம் பேசியதாக குற்றச்சாட்டுகள் எழுந்தன. இது தொடர்பாக டிடிவி தினகரன், சுகேஷ் சந்திரசேகர் உட்பட பலர் செயல்பட்டு வந்தது கண்டுபிடிக்கப்பட்டு அனைவரையும் காவல் துறையினர் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், இந்த புகார் மீது அமலாக்கத் துறையும் விசாரணை நடத்தி வருகிறது. டிடிவி தினகரனிடம் நடத்தப்பட்ட விசாரணையில், சுகேஷ் சந்திரசேகர் யார் என்பதே எனக்கு தெரியாது. அவரிடம் நான் பேசியதும் கிடையாது என திட்டவட்டமாக தெரிவித்தார்.

இது தொடர்பான வழக்கில் ஜாமின் வழங்கப்பட்டதை அடுத்து டிடிவி தினகரன் வெளியில் உள்ளார். இதை அடுத்து, இடைத்தரகர் சுகேஷ் சந்திரசேகர் அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையில், கடந்த சில நாட்களுக்கு முன்பு, டெல்லியில் உள்ள அமலாக்கத் துறை அலுவலகத்தில் அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் நேரில் விசாரைணக்கு ஆஜரானார். அப்போது அவரிடம் சுமார் 11 மணி நேரம் அமலாக்கத் துறை அதிகாரிகள் விசாரணை நடத்தினர். இந்த நிலையில், இந்த வழக்கில், வரும் 21 ஆம் தேதி மீண்டும் நேரில் ஆஜராகும்படி டிடிவி தினகரனுக்கு அமலாக்கத்துறை அதிகாரிகள் சம்மன் அனுப்பி உள்ளனர்.