Ponmudi: பொன்முடியை விடாத அமலாக்கத்துறை.. ஒரு மணி நேரத்திற்கு மேலாக கிடுக்குப்பிடி விசாரணை!
அமலாக்கத்துறையினர் பொன்முடி மற்றும் அவரது மகன் கவுதம சிகாமணிக்கு சொந்தமான இடங்களில் கடந்த ஜூலை 17ம் தேதி சோதனை நடத்தப்பட்டது. இந்த சோதனையில் பொன்முடிக்கு சொந்தமான ரூ.41.9 கோடி நிரந்தர வைப்பு தொகை மற்றும் வெளிநாட்டு கரன்சிகளும் சிக்கியது.
![Enforcement department investigating minister Ponmudi tvk Enforcement department investigating minister Ponmudi tvk](https://static-ai.asianetnews.com/images/01h4mtmj3z7kd6qjy2pepfg48s/ponmudi--2_363x203xt.jpg)
செம்மண் குவாரி முறைகேடு வழக்கில் உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடியிடம் அமலாக்கத்துறை அதிகாரிகள் சுமார் ஒரு மணிநேரத்திற்கு மேலாக கிடுக்குப்பிடி விசாரணை நடத்தி வருகின்றனர்.
கடந்த திமுக ஆட்சி காலத்தில் கனிம வளத்துறை அமைச்சராக இருந்த பொன்முடி தனது அதிகாரத்தை பயன்படுத்தி முறைகேடாக தனது மகன் கவுதம சிகாமணி மற்றும் உறவினர்களுக்கு செம்மண் குவாரி வழங்கியதாகவும், இதன் மூலம் சட்டவிரோதமாக செம்மண் எடுத்து அரசுக்கு ரூ. 28 கோடி வரை இழப்பு ஏற்படுத்தியதாக விழுப்புரம் மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் கடந்த 2012-ல் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.
இந்த வழக்கு தொடர்பாக விழுப்புரம் நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்று வரும் நிலையில், இந்த வழக்கை அடிப்படையாகக் கொண்டு அமலாக்கத்துறையினர் பொன்முடி மற்றும் அவரது மகன் கவுதம சிகாமணிக்கு சொந்தமான இடங்களில் கடந்த ஜூலை 17ம் தேதி சோதனை நடத்தப்பட்டது. இந்த சோதனையில் பொன்முடிக்கு சொந்தமான ரூ.41.9 கோடி நிரந்தர வைப்பு தொகை மற்றும் வெளிநாட்டு கரன்சிகளும் சிக்கியது.
இதனையடுத்து அன்று இரவே அமைச்சர் பொன்முடியை சென்னையில் உள்ள அவரது வீட்டில் இருந்து அமலாக்கத்துறை அலுவலகத்துக்கு அழைத்து சென்று அதிகாலை 3 மணிவரை விசாரணை நடத்தினர். பின்னர் மீண்டும் விசாரணைக்கு ஆஜராகும்படி சொல்லி அனுப்பினர். இந்நிலையில், 4 மாதங்கள் கழித்து உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடிக்கு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியது. அதில் நவம்பர் 30ம் தேதி நேரில் ஆஜராக வேண்டும் என்று கூறப்பட்டது.
இந்நிலையில், இன்று காலை சென்னை நுங்கம்பாக்கம் அமலாக்கத்துறை அலுவலகத்தில் விசாரணைக்காக அமைச்சர் பொன்முடி ஆஜராகினர். அவரிடம் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக அமலாக்கத்துறை அதிகாரிகள் கிடுக்குப்பிடி விசாரணை நடத்தி வருகின்றனர்.