ஊழியர்களுக்கு சம்பளமில்லை... கொரோனாவிலும் வேலை... ஐபேக்கின் அடங்காத அட்ராசிட்டி..!
ஸ்டாலினுடன் ஒப்பந்தத்தில் இருக்கும் ஒரு நிறுவனம் தொற்று நோய் பரவும் காலத்திலும் இவ்வாறு நடந்து கொள்வது முரண்பாடாக உள்ளது.
எப்பாடு பட்டாவது இந்த முறை முதலமைச்சர் நாற்காலியை பிடித்துவிட வேண்டும் என்பதற்காக தேர்தல் பிரச்சார வியூகர் பிரசாந்த் கிஷோரின் ஐபேக் நிறுவனத்துடன் ஒப்பந்தம் போட்டுள்ளார் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின். ஜனவரி முதல் களத்தில் குதித்தது பிரஷாந்த் கிஷோர் டீம். சில மாதங்களே உள்ள நிலையில் தேர்தல் பணிகளை முடுக்கி விட்ட நிலையில் தான் கொரோனா தொற்று வந்துமுட்டுக் கட்டை போட்டது. ஆனால் அதனையும் சமாளிக்க ஒன்றிணைவோம் வா போன்ற திட்டங்களை கையிலெடுத்தது ஐபேக் நிறுவனம். சில வேலைகளையும் செய்து வந்தது ஐபேக். அதற்காக நூற்றுக்கணக்கான இளைஞர்களை பணியிலமர்த்தினர். ஆனால், கொரொனா காலத்திலும் வேலை செய்த சம்பளத்தைகொடுக்காமல் ஐபேக் நிறுவனம் அட்ராசிட்டி செய்வதாக அதிர்ச்சித் தகவல் அங்கு பணியிலமர்த்தப்பட்டு பாதிக்கப்பட்டவர் மூலம் வெளியாகி இருக்கிறது.
அப்படி பாதிக்கப்பட்டவர், ``நான் ஐபேக் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறேன். தொற்றுநோய்களிலும் கூட அவர்கள் எங்களை சென்னை அலுவலகத்திற்கு வரும்படி வற்புறுத்துகிறார்கள். அது அவர்களின் முடிவு. நான் அதை புரிந்துகொள்கிறேன். ஆனால் எங்கள் சம்பளத்தை பிடித்து வைத்துள்ளார்கள். நாங்கள் சென்னைக்கு வரும்போதுதான் அவர்கள் சம்பளத்தை கொடுப்பதாக கூறுகிறார்கள். திமுகவை பொறுத்தவரை இது வேறு எந்த நிறுவனத்திலும் நடந்தாலும் அது மிகவும் தவறானது. ஆனால் அவர்கள் ஒப்பந்தம் போட்டுள்ள நிறுவனம் என்பதால் இது ஏற்றுக்கொள்ளத்தக்கது. திமுகவின் சமூக நீதிக்கு நன்கு அறியப்பட்டவராக மு.க.ஸ்டாலின் அன்றாடம் ட்வீட் போட்டு வருகிறார். ஸ்டாலினுடன் ஒப்பந்தத்தில் இருக்கும் ஒரு நிறுவனம் தொற்று நோய் பரவும் காலத்திலும் இவ்வாறு நடந்து கொள்வது முரண்பாடாக உள்ளது. இதனை பகிர்ந்து கொண்டாலாவது அது பகிரப்பட்டு குறைந்த பட்சம் ஒரு மாத சம்பளமாவது கிடைக்கும் என்கிற நம்பிக்கையில் பகிர்கிறேன்.
IPAC மெயில் மூலம் அங்கு பணியாற்றிவர்களில் மூன்று பேருக்கு கொரோனா பாசிட்டிவ் உறுதி செய்யப்பட்டுள்ளதாக அவர்களே தகவல் வெளியிட்டுள்ளார்கள். இந்த சூழ்நிலையிலும் அலுவலகத்துக்கு நாங்கள் வந்தே ஆக வேண்டும் எனக் கூறுகிறார்கள். அவர்கள் சொல்வது ஆபீஸுக்கு செல்லலாம் என இ பாஸுக்கு விண்ணப்பித்தால் அதுவும் கிடைக்கவில்லை. இதை அலுவலகத்தில் சொன்னால், எப்படியாவது வாருங்கள், விதிகளை மீறியாவது வாருங்கள் என கட்டாயப்படுத்தப்படுகிறார்கள்’’ என கூறியுள்ளார். அத்துடன் ஐபேக் நிறுவனம் ஊழியர்களுக்கு அனுப்பிய மெயில் ஒன்று வெளியாகியுள்ளது. அதில், ஊழியர்களுக்கு கொரோனா தொற்று இருப்பதை உறுதிப்படுத்தும் தகவல் இருக்கின்றன. அதேவேளையில், கொரோனா சோதனை எடுத்திருந்தாலும், அறிகுறிகள் இருந்தாலும் கட்டாயம் அலுவலகத்துக்கு வந்தே ஆக வேண்டும் என்கிற தொனியில் அந்த மெயிலில் தகவல்கள் உள்ளன.
கொரோனா நிதி வழங்க வேண்டும் என அரசை வலியுறுத்தி வருகிறார் மு.க.ஸ்டாலின். ஆனால் அவர் ஒப்பந்தம் செய்துள்ள நிறுவனம் சம்பளம் கொடுக்க மறுத்து கொரோனா காலத்திலும் பணிக்கு வர வற்புறுத்துகிறது.