உங்கள நம்பி ஓட்டுபோட்ட பொதுமக்களை ரொம்ப சோதிக்காதீங்க... எடப்பாடிக்கு கோரிக்கை வைத்த டி.டி.வி.தினகரன்..!
மின் வாரியத்தை நிர்வாகச் சீர்கேடுகளில் இருந்து மீட்டெடுத்து, லாபத்தில் இயக்குவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளாமல், ஆட்சியாளர்கள் தங்களின் திறமையின்மையை மக்களின் தலையில் பேரிடியாக இறக்குவது தவறானது. எனவே இந்த மின் இணைப்பு கட்டண உயர்வை எடப்பாடி பழனிசாமி அரசு மொத்தமாக திரும்பப்பெற வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்.
தமிழகத்தில் மின் இணைப்புக்கான கட்டணங்கள் 300% உயர்த்தப்பட்டிருப்பதற்கு அமமுக பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரன் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்;- தமிழகத்தில் மின் இணைப்புக்கான கட்டணங்களை 300 சதவீதம் வரை உயர்த்தி இருப்பது கடும் கண்டனத்திற்குரியது. இந்தக் கட்டண உயர்வை எடப்பாடி பழனிசாமி அரசு உடனடியாக திரும்பப் பெற வேண்டும் என வலியுறுத்துகிறேன். வீடுகள், கடைகள், நிறுவனங்கள், வழிபாட்டுத் தலங்கள், கல்வி நிலையங்கள், தொழிற்சாலைகள் ஆகியவற்றுக்கான மின் இணைப்பு கட்டணம், மீட்டர் வைப்புத்தொகை, வளர்ச்சிக் கட்டணம், பதிவு கட்டணம் உள்ளிட்ட கட்டணங்கள் பலமடங்கு உயர்த்தப்பட்டுள்ளன. உதாரணத்திற்கு, பல்வகை மின்இணைப்பு கட்டணம் ரூ.1,600/-லிருந்து ரூ.6,400/-ஆக உயர்த்தப்பட்டுள்ளது.
இதனைத் தொடர்ந்து மின்சார கட்டணங்களையும் பெரிய அளவிற்கு உயர்த்த முதல்வர் எடப்பாடி பழனிசாமி அரசு திட்டமிட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கின்றன. ஏற்கனவே பால் மற்றும் பேருந்து கட்டண உயர்வுகளால் ஏற்கனவே பாதிக்கப்பட்டிருக்கிற தமிழக மக்களுக்கு இந்தக் கட்டண உயர்வு பெரும் சுமையாகிவிடும்.
மின் வாரியத்தை நிர்வாகச் சீர்கேடுகளில் இருந்து மீட்டெடுத்து, லாபத்தில் இயக்குவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளாமல், ஆட்சியாளர்கள் தங்களின் திறமையின்மையை மக்களின் தலையில் பேரிடியாக இறக்குவது தவறானது. எனவே இந்த மின் இணைப்பு கட்டண உயர்வை எடப்பாடி பழனிசாமி அரசு மொத்தமாக திரும்பப்பெற வேண்டும் என்று வலியுறுத்துகிறேன் என அறிக்கையில் தெரிவித்துள்ளார்.