சென்னையில் ஓரிரு நாட்களில் மின்சார பேருந்துகள் இயக்கப்படும் என சட்டப்பேரவையில் அமைச்சர் விஜயபாஸ்கர் அறிவித்துள்ளார்.

சென்னை தலைமை செயலகத்தில் அனைத்து போக்குவரத்து கழகங்களின் செயல்பாடுகள் குறித்த ஆய்வு கூட்டம் கடந்த ஜூன் மாதம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் சுற்றுச்சூழல் மாசுபடுவதை குறைக்கின்ற வகையில், சென்னை, கோவை மற்றும் மதுரை ஆகிய பெருநகரங்களில் மின்சார பேருந்துகளை இயக்குதல் உள்ளிட்டவை குறித்து ஆலோசிக்கப்பட்டது.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

இதன்பின் செய்தியாளர்களிடம் பேசிய தமிழக போக்குவரத்து துறை அமைச்சர் விஜயபாஸ்கர், சுற்று சூழல் நலன் கருதி தமிழகத்தில் சென்னை, கோவை மற்றும் மதுரை ஆகிய பெருநகரங்களில் மின்சார பேருந்துகளை இயக்க திட்டமிடப்பட்டுள்ளதாக கூறினார்.

சென்னையில் மின்சார பேருந்துகள் இயக்கப்படுவது குறித்த அறிவிப்பை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி விரைவில் வெளியிடுவார் என்றும் கூறினார். இதற்காக, ஜெர்மன் நிறுவனத்துடன் மிகக்குறைந்த வட்டியில் 12 ஆயிரம் புதிய மின்சார பேருந்துகள் வாங்க ஒப்பந்தம் போடப்பட்டு உள்ளது.

இந்நிலையில் இன்று இன்று சட்டப்பேரவையில் பேசிய அமைச்சர் விஜயபாஸ்கர், முதல் கட்டமாக 100 மின்சாரப் பேருந்துகள் வாங்கப்பட்டு சென்னையில் 80 பேருந்துகளும், கோயம்புத்தூர் மற்றும் மதுரையில் தலா 10 பேருந்துகளும் இயக்கப்படும் என தெரிவித்தார்.

இன்னும் ஓரிரு நாட்களில் இந்தப் பேருந்துகள் இயக்கப்படும் என்றும், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இந்த பேருந்து சேவையை தொடங்கி வைப்பார் என்றும் அமைச்சர் விஜய பாஸ்கர் கூறினார்.