இதோ வந்துட்டாரு… தேர்தல் மன்னன் பத்மராஜன்…உள்ளாட்சி தேர்தலிலும் போட்டி
ஊரக உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட தேர்தல் மன்னன் பத்மராஜன் வேட்புமனு தாக்கல் செய்துள்ளார்.
ஊரக உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட தேர்தல் மன்னன் பத்மராஜன் வேட்புமனு தாக்கல் செய்துள்ளார்.
அரசியலை உன்னிப்பாக கவனிப்பவர்களுக்கு பத்மராஜன் என்றால் தெரியும். இன்னும் கொஞ்சம் அழுத்தமாக தேர்தல் மன்னன் பத்மராஜன் என்றால் அரசியல் தெரிந்தவர்கள் அல்லது அரசியல் பேசுபவர்களுக்கு தெரியாமல் இருக்க முடியாது.
காரணம்… இவர் நாட்டில் எந்த தேர்தல் அறிவிப்பு வெளியானாலும் டக்கென்று அங்கு போட்டியிட வேட்பு மனு தாக்கல் செய்துவிடுவார். கடந்த காலங்களில் நரசிம்மராவ், மன்மோகன் சிங், இப்போது பிரதமராக இருக்கும் மோடி உள்ளிட்டோரை எதிர்த்து வேட்பு மனு தாக்கல் செய்து இருக்கிறார்.
ஏன் அண்மையில் நடைபெற்ற தமிழகம், புதுச்சேரி ராஜ்ய சபா தேர்தலிலும் கூட வேட்பு மனு தாக்கல் செய்திருக்கிறார். இதுவரை 221 முறை தேர்தலில் போட்டியிட வேட்பு மனு தாக்கல் செய்து கின்னஸ் சாதனை படைத்திருக்கிறார்.
இப்போது இவரை பற்றி பேச காரணம்… உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட வேட்பு மனு தாக்கல் செய்துவிட்டு வந்திருக்கிறார். சேலம் மாவட்டம் மேட்டூரில் சின்னசேலம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்துக்கு வந்திருக்கிறார்.
கையில் வைத்திருக்கும் ஆவணங்களுடன் அவர் சின்னசேலம் ஒன்றியம், வி. அலம்பலம் என்ற ஊராட்சியின் தலைவர் பதவிக்கும், அம்மையகரம் கிராம வார்டு உறுப்பினர் பதவிக்கு மனு தாக்கல் செய்திருக்கிறார்.
சின்னசேலம் ஒன்றியம், 11வது வார்டு ஒன்றிய கவுன்சிலர் பதவி, 11வது வார்டு மாவட்ட கவுன்சிலர் பதவி ஆகியவற்றுக்கும் கூட மனுத்தாக்கல் செய்துவிட்டு வந்திருக்கிறார். சாதாரண மனிதனும் தேர்தலில் வேட்பாளராக போட்டியிடலாம் என்பதை மக்களுக்கு உணர்த்தவே இப்படி செய்வதாக கூறி இருக்கிறார் தேர்தல் மன்னன் பத்மராஜன்.