மனுதாரர் கூறும் குற்றச்சாட்டுக்கள் உண்மை என எப்படி கூற முடியும் எனக் கேள்வி எழுப்பி, இதுகுறித்து ஆதாரங்களுடன் தேர்தல் ஆணையத்துக்கு மீண்டும் மனு அளிக்க மனுதாரருக்கு உத்தரவிட்டனர்.

விருதுநகர் மாவட்டம் திருச்சுழி தொகுதியில் சுயேட்சை வேட்பாளராக போட்டியிடும் திருப்பதி என்பவர் தாக்கல் செய்த மனுவில், திருச்சுழி தொகுதியில், திமுக சார்பில் போட்டியிடும் தங்கம் தென்னரசு, கடந்த 19ம் தேதி காரைபட்டி தாலுகாவிற்கு உட்பட்ட அவியூர் கிராமத்தில் வாக்களர்களுக்கு பரிசு பொருட்கள் மற்றும் சில்வர் பாத்திரங்கள் உள்ளிட்ட பரிசு பொருட்களை வழங்கியதாக தெரிவித்துள்ளார். 

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

இது தொடர்பாக புகைப்படத்துடன் தொகுதி தேர்தல் அதிகாரியிடம் புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. மேலும் பரிசுப் பொருள்கள் வழங்குவதை தடுக்கவும் தேர்தல் அதிகாரி எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என மனுவில் தெரிவித்துள்ளார். திருச்சுழி தேர்தல் அதிகாரியும் தங்கம் தென்னரசுக்கு சாதகமாக செயல்படுவதால், திருச்சுழி தொகுதி தேர்தலை ரத்து செய்வதுடன், திமுக வேட்பாளர் தங்கம் தென்னரசு தேர்தலில் போட்டியிடுவதில் இருந்து தகுதி நீக்கம் செய்ய உத்தரவிட வேண்டும் எனவும் மனுவில் கோரியுள்ளார்.

இந்த மனுவை விசாரித்த தலைமை நீதிபதி சஞ்சிவ் பானர்ஜி, நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி அடங்கிய அமர்வு, இந்த புகார் தொடர்பாக தேர்தல் ஆணையம் தான் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கூறி, வழக்கை முடித்து வைத்தது. அப்போது குறுக்கிட்ட மனுதாரர் தரப்பு வழக்கறிஞர், தேர்தல் ஆணையம் தங்கள் புகார் மனு மீது முடிவெடுக்கும் வரை தேர்தலை தள்ளிவைக்க வேண்டும் எனக் கோரினார். இதை ஏற்க மறுத்த நீதிபதிகள், மனுதாரர் கூறும் குற்றச்சாட்டுக்கள் உண்மை என எப்படி கூற முடியும் எனக் கேள்வி எழுப்பி, இதுகுறித்து ஆதாரங்களுடன் தேர்தல் ஆணையத்துக்கு மீண்டும் மனு அளிக்க மனுதாரருக்கு உத்தரவிட்டனர்.


ஏற்கனவே திருச்சி மேற்கு தொகுதி திமுக வேட்பாளர் கே.என்.நேருக்கு ஆதரவாக அஞ்சல் வாக்களிப்பதற்காக திமுகவைச் சேர்ந்த வழக்கறிஞர் மூலம் காவல் துறையினருக்குப் பணம் விநியோகம் செய்யப்பட்டதாகப் புகார் எழுந்தது. திருவண்ணாமலை திமுக வேட்பாளர் எ.வ.வேலு வாக்காளர்களுக்கு பணப்பட்டுவாடா செய்ய முயன்றிப்பதாக கிடைத்த புகாரின் அடிப்படையில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தினர். இப்படி அடுத்தடுத்து திமுகவினர் பணப்பட்டுவாடா புகாரில் சிக்குவது சர்ச்சையை உருவாக்கியுள்ளது.