பயிற்சியில் கலந்துகொள்ளாதவர்கள் பணி நீக்கம்.. வாக்குச்சாவடி அலுவலர்களுக்கு தேர்தல் ஆணையம் எச்சரிக்கை..
வருகின்ற 21-3-2021 ஞாயிற்றுக்கிழமை அன்று நடைபெற உள்ள பயிற்சி வகுப்புகளில் கலந்துகொள்ள தவறும் அனைத்து வாக்குச்சாவடி அலுவலர்கள் மீது இந்திய தேர்தல் ஆணையத்தின் மக்கள் பிரதிநிதித்துவ சட்டம் 1951 பிரிவு 134 மற்றும் இந்திய தண்டனைச் சட்டத்தின்படி பணிநீக்கம் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும்
சென்னை மாவட்டத்தில் உள்ள 16 சட்டமன்ற தொகுதிகளின் வாக்குச்சாவடிகளில் பணிபுரிய உள்ள அலுவலர்களுக்கான முதற் கட்ட தேர்தல் பயிற்சி வகுப்பில் கலந்து கொள்ள தவறிய அலுவலர்கள் 21-3-2011 அன்று நடைபெற உள்ள பயிற்சி வகுப்பில் தவறாமல் கலந்து கொள்ள வேண்டும். அப்படி தவறும் வாக்குச்சாவடி அலுவலர்கள் மீது பணியிடை நீக்கம் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் தெரிவித்துள்ளார்.
இதுபற்றி சென்னை மாநகராட்சி சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாடு சட்டமன்ற பொதுத்தேர்தல் 2001 தொடர்பாக சென்னை மாவட்டத்துக்கு உட்பட்ட 16 சட்டமன்ற தொகுதிகளில் அமைக்கப்பட்டுள்ள 5 ஆயிரத்து 913 வாக்குச்சாவடிகளில் பணியாற்ற உள்ள வாக்குச்சாவடி அலுவலர்களுக்கான முதற்கட்ட பயிற்சி வகுப்புகள் சம்பந்தப்பட்ட தேர்தல் நடத்தும் அலுவலர்களால் கடந்த 13-3-2021 சனிக்கிழமை அன்று அந்தந்த சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட இடங்களில் நடைபெற்றது.
மேற்படி நடைபெற்ற முதற் கட்ட தேர்தல் பயிற்சி வகுப்பில் கலந்து கொள்ள தவறிய வாக்குச்சாவடி அலுவலர்களுக்கு மக்கள் பிரதிநிதித்துவ சட்டம் 1951-ன் படி விளக்கம் கேட்கும் குறிப்பாணை, சம்மந்தப்பட்ட துறையில் வாயிலாக அனுப்பப்பட்டுள்ளது. இந்திய தேர்தல் ஆணையத்தின் அறிவுரைப்படி மாற்றுத்திறனாளிகள், கர்ப்பிணிப் பெண்கள் மற்றும் தீவிர நோய்வாய்ப்பட்டு மருத்துவமனையில் இருக்கும் பணியாளர்கள், தவிர வேறு எவருக்கும் தேர்தல் பணியில் இருந்து விலக்கு அளிக்கப்படவில்லை. மேற்படி 13-3-2011 அன்று நடைபெற்ற முதற் கட்ட தேர்தல் பயிற்சி வகுப்பில் கலந்து கொள்ள தவறிய வாக்குச்சாவடி அலுவலர்களுக்கு வருகின்ற 21-3-2021 ஞாயிற்றுக்கிழமை அன்று மீண்டும் பயிற்சி வகுப்புகள் நடைபெற உள்ளது.
இதுதொடர்பான பணி ஒதுக்கீடு செய்யப்பட்ட ஆணை வருவாய் துறை அலுவலர்களால் வாக்குச்சாவடி அலுவலர்களுக்கு சம்பந்தப்பட்ட துறையின் மூலம் வழங்கப்படும் எனவும், மேலும் வாக்குச்சாவடி அலுவலர்களின் அலைபேசி வழியாக குறுந்தகவல் மூலமாகவும், பயிற்சி வகுப்பு நடைபெறும் இடம் மற்றும் நேரம் போன்ற விவரங்கள் தெரிவிக்கப்படும். எனவே வருகின்ற 21-3-2021 ஞாயிற்றுக்கிழமை அன்று நடைபெற உள்ள பயிற்சி வகுப்புகளில் கலந்துகொள்ள தவறும் அனைத்து வாக்குச்சாவடி அலுவலர்கள் மீது இந்திய தேர்தல் ஆணையத்தின் மக்கள் பிரதிநிதித்துவ சட்டம் 1951 பிரிவு 134 மற்றும் இந்திய தண்டனைச் சட்டத்தின்படி பணிநீக்கம் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட தேர்தல் அலுவலர் பிரகாஷ் அவர்கள் தெரிவித்துள்ளார்.