election commission postponed to judgement date about double leaf case

இரட்டை இலை விவகாரத்தில் மீண்டும் வாதிட அவகாசம் கோரிய டிடிவி தரப்பு கோரிக்கையை தேர்தல் ஆணையம் நிராகரித்து தீர்ப்பை ஒத்திவைத்துள்ளது.

தலைமை தேர்தல் ஆணையத்தால் முடக்கி வைக்கப்பட்டுள்ள அதிமுகவின் இரட்டை இலை சின்னம் யாருக்கு என்பது குறித்து, வழக்கு விசாரணை தேர்தல் ஆணையத்தில் நடத்தப்பட்டு வருகிறது. இரட்டை இலை சின்னத்தை பெறுவது தொடர்பாக ஓ.பி.எஸ்., இ.பி.எஸ், அணியினருக்கும், டிடிவி தினகரன் அணியிருக்கும் இடையே கடும் போட்டி நிலவி வருகிறது.

இந்திய தலைமை தேர்தல் ஆணைய அலுவலகத்தில் தலைமை தேர்தல் ஆணையர் ஏ.கே. ஜோதி முன்னிலையில் நடைபெற்று வரும் இந்த வழக்கு விசாரணையில் கடந்த 6 ஆம் தேதியே டிடிவி தரப்பு வாதம் முடிவுற்றது. 

இந்நிலையில் இன்று 7 ஆம் கட்ட விசாரணை நடைபெற்றது. இன்று நடைபெற்ற விசாரணையில் எடப்பாடி தரப்பு மற்றும் ஒபிஎஸ் தரப்பு வழக்கறிஞர்கள் தங்கள் வாதங்களை முன்வைத்தனர். 

இதைதொடர்ந்து மீண்டும் வாதிட டிடிவி தரப்பு வழக்கறிஞர் அவகாசம் கோரினார். ஆனால் டிடிவி தரப்பின் கோரிக்கையை நிராகரித்து தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் தேர்தல் ஆணையம் ஒத்திவைத்துள்ளது. இதனால் குறிப்பிட்ட தேதியான நவம்பர் 10 ஆம் தேதிக்குள் தீர்ப்பு வர வாய்ப்பில்லை என தெரிகிறது.