election commission notice
அரசு வீடுகளுக்கு வாடகை , மின்கட்டணம் உள்ளிட்ட கட்டனங்களை கட்டாமல் தடையில்லா சான்றிதழ் பெறாத வேட்பாளர்கள் தேர்தலில் போட்டியிட தடை விதிக்க முடியாது என மத்திய சட்டத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இதன் மூலம் வாடகை பாக்கி இருந்தாலும் வேட்பாளர்கள் தேர்தலி்ல போட்டியிடலாம் என்ற நிலை உருவாகியுள்ளது.
அரசாங்க வீடுகளில் தங்கியிருந்துவிட்டு வாடகை , மின் கட்டணம் உள்ளிட்டவற்றை செலுத்தி பண பாக்கியில்லா சான்றிதழ் பெறாத வேட்பாளர்களை தேர்தலில் போட்டியிட தடை விதிக்கலாம் என தேர்தல் ஆணையம் மத்திய அரசுக்கு பரிந்துரை செய்திருந்தது.
இது குறித்து பரிசீலித்த மத்திய சட்டத்துறை அமைச்சகம், அந்த பரிந்துரையை நிராகரித்துவிட்டது. இது குறித்து சட்டத்துறை அமைச்சகம் கூறி இருப்பதாவது-
‘‘வீடுகளை வாடகைக்கு விடும் நிறுவனங்கள் ஒரு தலைப்பட்சமாக நிலுவை பாக்கியில்லை சான்றிதழை வழங்க மறுக்கும் பட்சத்தில், அதை எதிர்த்து அவர் நீதிமன்றத்திற்கு செல்லவேண்டி வரும்.
இதற்கு நீண்ட காலம் ஆகும் என்பதால் அந்த வேட்பாளரை தேர்தலில் போட்டியிடுவதற்கு தடை விதிப்பது எப்படி நியாயமாக இருக்கமுடியும்?.
எனவே தடையில்லா சான்றிதழ் பெறவில்லை என்பதற்காக ஒருவரை தேர்தலில் போட்டியிடுவதை தடை செய்வது சரியாக இருக்காது’’.
இவ்வாறு மத்திய சட்டத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
டெல்லி உயர்நீதிமன்றம் அளித்துள்ள உத்தரவின் அடிப்படையில் அரசுக்கு செலுத்தவேண்டிய அனைத்து வாடகை, மின்கட்டண பாக்கிகளையும் செலுத்தி வரி பாக்கியில்லா சான்றிதழை சமர்ப்பிக்குமாறு அனைத்துஅரசியல் கட்சிகளுக்கும் தேர்தல் ஆணையம் சமீபத்தில் அறிக்கை அனுப்பியிருந்தது குறிப்பிடத்தக்கது,.
