ஊராட்சித் தலைவர் தேர்தல் !! தூத்துக்குடி அருகே பயங்கரம் !! தேர்தல் தகராறில் ஒருவர் சரமாரியாக வெட்டிக் கொலை !!
ஒட்டப்பிடாரம் அருகே ஊராட்சி மன்றத் தலைவர் தேர்தலில் இரு தரப்பினரிடையே ஏற்பட்ட மோதலில் மாரியப்பன் என்பவர் வெட்டிக் கெதலை செய்யப்பட்டார். 3 பேர் பலத்த வெட்டுக் காயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
தூத்துக்குடி மாவட்டம் ஒட்டப்பிடாரத்தில் ஊராட்சித் தலைவர் பதவிக்கு லதா என்பவர் போட்டியிடுகிறார். லதாவின் கணவர் மாசாணசாமி மேட்டூர் என்ற இடத்தில் உள்ள ஒரு வாக்குச்சாவடி மையத்தில் முகவராக இருந்தார்.
இன்று மாலையில் வாக்குப்பதிவு நிறைவடையும் நேரத்தில் மாசாணசாமியிடம் எதிர் தரப்பு வேட்பாளரான இளையராஜா தரப்பை சேர்ந்தவர்கள் தகராறு செய்துள்ளனர். அப்போது, அங்கிருந்தவர்கள் அவர்களை வெளியேற்றிவிட்டனர்.
வெளியே வந்த அவர்களுக்கு இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது, மாசாணசாமியின் ஆதரவாளர்களான ஜேசுராஜ், ராமசாமி ஆகியோர் மீது இளையராஜா தரப்பை சேர்ந்தவர்கள் கொலை வெறித்தாக்குதல் நடத்தி உள்ளனர்.
இதில் 3 பேருக்கும் பலத்த காயம் ஏற்பட்ட நிலையில், அவர்கள் ஒட்டப்பிடாரம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இதற்கிடையே, ஒட்டப்பிடாரம் மருத்துவமனை அருகே நடந்து சென்ற மாரியப்பன் என்பவரை, மாசாணசாமி தரப்பைச் சேர்ந்த ஒரு கும்பல் சரமாரியாக அரிவாளால் வெட்டியது.
இதில் படுகாயமடைந்த மாரியப்பன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். மாரியப்பன் இந்த தேர்தலின்போது, இளையராஜாவுக்கு ஆதரவாக வேலை பார்த்துள்ளார். அதனால், மாசாணசாமியின் ஆதரவாளர்கள் அவரை அடித்து கொலை செய்திருக்க கூடும் என கூறப்படுகிறது. இதுதொடர்பாக போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
தொடர்ந்து அப்பகுதியில் பதற்றம் நிலவுவதால் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.