புதுச்சேரி நெல்லித்தோப்பு தொகுதியின் இடை தேர்தலில் போட்டியிடும் நாராயண சாமி, தனது பிரசாரத்தை தொடங்கினார்.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

கடந்த மே மாதம் நடந்த சட்டமன்ற தேர்தலில், தமிழகம் மற்றும் புதுச்சேரியில் திமுக, காங்கிரஸ் கூட்டணி இருந்தது. புதுச்சேரியில் நடந்த சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ், திமுக கூட்டணி 17 இடங்களில் வெற்றி பெற்றது. தேர்தலில் போட்டியிடாத நாராயணசாமி முதல்வராக பொறுப்பேற்றுக்கொண்டார்.

நாராயணசாமி தேர்தலில் போட்டியிடுவதற்கு வசதியாக நெல்லித்தோப்பு தொகுதி காங்கிரஸ் எம்எல்ஏ ஜான்குமார் தனது பதவியை ராஜினாமாசெய்தார். தமிழகத்தின் 3 தொகுதி மற்றும் நெல்லித்தோப்பு தொகுதிக்கு நவம்பர் 19ம் தேதி இடைத்தேர்தல் நடத்தப்படும் என தேர்தல் கமிஷன் அறிவித்தது. இதையொட்டி தேர்தல் நடத்தை விதிமுறைகளும் அமலுக்கு வந்தன.

இந்நிலையில், நெல்லித்தோப்பு தொகுதியில் நாராயணசாமி போட்டியிடுவார் என்று காங்கிரஸ் தலைமையும் அறிவித்துள்ளது. இதையடுத்து முதல்வர் நாராயணசாமி இன்று காலை நெல்லித்தோப்பு தொகுதியில் கூட்டணி கட்சியினருடன் பிரச்சாரத்தை தொடங்கினார்.

தொகுதியின் சனி மூலையாக கருதப்படும் பிள்ளைத்தோட்டம் முத்துமாரியம்மன் கோயிலில் சிறப்பு வழிபாடு நடத்திய நாராயணசாமி, இன்று காலை 7.31 மணிக்கு தனது பிரச்சாரத்தை தொடங்கினார்.