ban for two leaf

இரட்டை இலை சின்னம் முடக்கம்…ஏன்? எதற்காக? என்ன சொல்கிறது தேர்தல் ஆணையம்…

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

எம்.ஜி.ஆர், ஜெயலலிதா என்ற இரட்டைத் தலைவர்கள் 40 ஆண்டுகளுக்கு மேலாக கட்டிக் காத்து வந்த இரட்டை இலை சின்னம் சசிகலா மற்றும் ஓபிஎஸ் இருவரிடையே நிகழ்ந்த அதிகாரப் போட்டியால் முடக்கப்பட்டுள்ளது.

சின்னம் மட்டுமல்லாமல் அதிமுக என்றே கட்சியின் பெயரையும் இரு தரப்பினரும் பயன்படுத்தக் கூடாது என்றும் தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு அதிமுக இரண்டாக உடைந்தது. சசிகலா மற்றும் ஓபிஎஸ் என இரு தரப்பினரும் கட்சியும் சின்னமும் தங்களுக்குத்தான் சொந்தம் என உரிமை கொண்டாடி இந்திய தேர்தல் ஆணைத்திடம் பஞ்சாயத்தைக கூட்டின.

இவர்கள் இரு தப்பினரின் வாதம் நேற்று கலை 10 30 மணிக்குத் தொடங்கி மாலை 5.30 வரை நீடித்தது. இதனையடுத்து இரவு 11 மணிக்கு தேர்தல் ஆணையம் இரட்டை இலை சின்னத்தை முடக்கி வைத்து சசிகலா மற்றும் ஓபிஎஸ் என இரு தரப்பினரையும் அதிர வைத்தது.

தேர்தல் ஆணையத்தின் இந்த அதிரடி அறிவிப்பால், ஆர்.கே.நகர் இடைத் தேர்தலில் சசிகலா மற்றும் ஓபிஎஸ் தரப்பினர் இரட்டை இலைச் சின்னத்தை மட்டுமல்ல அதிமுக என்ற கட்சியின் பெயரையும் பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

இது தொடர்பாக இந்திய தேர்தல் ஆணையம் என்ன சொல்கிறது என்பதைப் பார்க்கலாம்…

அதிமுகவின் பொதுச்செயலாளராக சசிகலா நியமனம் செய்யப்பட்டது தொடர்பான சர்ச்சை நீடிப்பதால், இரட்டை இலை சின்னம் முடக்கி வைக்கப்பட்டுள்ளது

.இனிமேல் சசிகலா மற்றும் ஓபிஎஸ் என இரு தரப்பினரும் ஆர்.கே.நகர் இடைத் தேர்தலின்போது பிரசாரத்தில் அ.தி.மு.க., என்ற கட்சியின் பெயரையோ, இரட்டை இலை சின்னத்தையோ பயன்படுத்தக்கூடாது.

இரு அணிகளுக்கும் இன்று காலை 10 மணிக்கு புதிய சின்னங்கள் ஒதுக்கப்படவுள்ளன.

இரு தரப்பும் தாங்கள் விரும்பும் 3 சின்னங்களை தேர்வு செய்து கொள்ளலாம். அதிலிருந்து ஒரு சின்னம் தேர்வு செய்யப்படும்.

தேர்ந்தெடுக்கப்பட்ட சின்னங்களுடன், காலை 10 மணிக்கு தேர்தல் ஆணையத்தை அணுக இருதரப்பினருக்கும் தேர்தல் ஆணையம் உத்தரவு.

 இரு தரப்பும் நியாயமாக நடந்து கொள்வதற்காகவே இரட்டை இலை சின்னம் முடக்கப்பட்டுள்ளது

இரட்டை இலை சின்னம் முடக்கம் என்பது ஒரு இடைக்கால உத்தரவு தான்.

இரட்டை இலை சின்னத்தை மீட்க ஏப்ரல் மாதம் .17-ம் தேதி வரை கெடு விதிக்கப்பட்டுள்ளது. அதற்குள் உரிய ஆவணங்களை தேர்தல் ஆணையத்திடம் சமர்பிக்க வேண்டும் என தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எம்.ஜி.ஆர் மறைவுக்கு பின் அதிமுகவின் சின்னமான இரட்டை இலை, 27 ஆண்டுகளுக்கு பின் இரண்டாவது முறையாக முடக்கி வைக்கப்பட்டுள்ளது.

எம்.ஜி.ஆர்., மறைந்த போது அதிமுக ஜானகி அணி , ஜெ., அணி என பிரிந்த போது முதன்முறையாக இரட்டை இலை சின்னம் முடக்கப்பட்டது.

தற்போது 27 ஆண்டுகளுக்கு பின்னர் அதிமுக சசிகலா அணி, ஓபிஎஸ் அணி என இரண்டாக பிரிந்ததால் இரட்டை இலை சின்னம் முடக்கப்பட்டுள்ளது