egmore court decided to investigate sasikala

அந்நிய செலாவணி வழக்கில் சசிகலாவிடம் விசாரணை நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. 

சென்னை எழும்பூர் பொருளாதார குற்றவியல் நீதிமன்றத்தில் கடந்த 20 ஆண்டுகளாக நடைபெற்று வரும் அந்நிய செலாவணி வழக்கு தற்போது இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது.

டிடிவி.தினகரன் மீதான குற்றச்சாட்டு நாள்தோறும் விசாரிக்கப்பட்டு வரும் நிலையில், ஜெ.ஜெ.தொலைக்காட்சிக்கு வெளிநாடுகளில் இருந்து ஒளிபரப்பு சாதனங்கள் வாங்கிய வழக்கில் முறைகேடு நடைபெற்றிருப்பதாக அமலாக்கத்துறை தொடர்ந்த வழக்கு மீது இன்று விசாரணை நடைபெற்றது. 

அப்போது சசிகலா சார்பில் ஆஜரான வழக்கறிஞர், சொத்துக் குவிப்பு வழக்கில் சசிகலா சிறையில் அடைக்கப்பட்டிருப்பதால் அவரிடம் காணொளிக் காட்சி மூலம் விசாரணை நடத்த அனுமதிக்கும்படி கோரிக்கை விடுத்தார். இதனை ஏற்றுக் கொண்ட நீதிபதி, இன்னும் 2 வாரத்தில் காணொளிக் காட்சி மூலம் விசாரணை நடத்தப்படும் என்று தெரிவித்தார். 

மேலும் இது தொடர்பாக கர்நாடக அரசு மற்றும், உள்துறை செயலரின் அனுமதியை சசிகலா பெறவேண்டும் என்றும் தவறும்பட்சத்தில் வழக்கு விசாரணைக்காக நேரில் ஆஜராக வேண்டியிருக்கும் என்றும் தெரிவித்தார். 

சொத்துக்குவிப்பு வழக்கில் சிறைத் தண்டனை பெற்ற சசிகலாவுக்கு அந்நிய செலாவணி வழக்கும் பெரும் பின்னடைவை ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.