மிஸ்டர் மோடி…எத்தனை நாளைக்குத்தான் ஊமையா இருக்கப் போறீங்க ? உலகம் முழுவதும் இருந்து 637 கல்வியாளர்கள் கடிதம்….
இந்தியாவில் அடுத்தடுத்து அரங்கேறும் பாலியல் வன்கொடுமைகள் குறித்து ஏன், வாய் திறக்க மறுக்கிறீர்கள்..? என்றும் உங்கள் நாடகத்தை கலைத்துவிட்டு கருத்துக்களை முன்வையுங்கள் என்றும் உலகம் முழுவதுமிருந்து 637 கல்வியாளர்கள் மோடிக்கு கடிதம் எழுதியுள்ளர்.
இந்தியாவில் தலித்துக்கள், பழங் குடியினர் மற்றும் பெண்களுக்கு எதிரான வன்முறைகள் தொடர் கதையாகி வருவதைச் சுட்டிக்காட்டியுள்ள அவர் கள், இவற்றை தடுக்க பிரதமர் மோடி போதிய நடவடிக்கை எடுக்கவில்லை என்று குற்றம் சாட்டியுள்ளனர்.
உலகப் புகழ்பெற்ற 637 கல்லூரிகளில் இருந்து கல்வியாளர்கள் இந்த கடிதத்தை எழுதியுள்ளனர். இதில் 200-க்கும் அதிகமான கடிதங்கள், அமெரிக்கா, ஆஸ்திரேலியா, லண்டனில் பணியாற்றும் கல்வியாளர்கள் எழுதியதாகும். 5 ஆயிரத்திற்கும் அதிகமான மாணவர்கள் இந்த கடிதத்தில் கையெழுத்திட்டுள்ளனர்.
“காஷ்மீரில் ஒரு சிறுமி, கும்பல் வல்லுறவுக்கு உள்ளாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்டுள்ளார். உத்தரப்பிரதேசத்தில் பாஜக சட்டமன்ற உறுப்பினர் ஒருவரே 17 வயதுச் சிறுமியை வல்லுறவுக்கு உள்ளாக்கி இருக்கிறார். ஆனால்,இதுபோன்ற சம்பவங்களில் நீங்கள் மவுனம் காத்து வருகிறீர்கள். பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி கிடைக்கும் என்று உறுதியளிக்கவும் இதுவரை நீங்கள்முன்வரவில்லை. இது கண்டனத்திற்குஉரியது என்று கல்வியாளர்கள் தங்களின் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளனர்.
மேலும், “நீங்கள் (பிரதமர்) பெண்களுக்கு எதிராக நடக்கும் எந்த விஷயத்திற்கும் குரல் கொடுப்பதில்லை; முக்கியமாக உங்கள் கட்சியினர் செய்யும் குற்றம் பற்றி எதுவும் பேசுவதில்லை;
நீங்கள் கடைசியாக காஷ்மீர் சம்பவத்தை கண்டித்தது கூட மயில் இறகால் வருடியது போல மென்மையாகவே இருந்தது. நீங்கள் இப்படி அமைதியாக செயலற்று இருப்பது நம்முடைய ஜனநாயகத்திற்கு மிகப்பெரிய பிரச்சனையை உண்டாக்கும்” என்றும் அவர்கள் எச்சரித்துள்ளனர்
.பாஜக ஆளும் மாநிலங்களில்தான், சிறுபான்மையினர் மற்றும் தலித்துகளுக்கு எதிரான தாக்குதல்கள் தொடர்ந்து நடைபெறுவதாக கூறியுள்ள கல்வியாளர்கள், மத்தியில் பாஜக ஆட்சிக்கு வந்த பிறகே இதுபோன்ற தாக்குதல்கள் நடப்பதாகவும் தெரிவித்துள்ளனர். பாஜக அரசுகள் நேரடியாக வன் முறையில் ஈடுபடவில்லை என்றாலும், வன்முறையில் ஈடுபடுவோர் பாஜக-வுடன் தொடர்புடையவர்களாகவே இருக்கிறார்கள் என்றும் குற்றம் சாட்டியுள்ளனர்.
ஓய்வுபெற்ற ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள் 49 பேர், மோடியின் மவுனத்தைகண்டித்து ஏற்கெனவே கடிதம் எழுதியிருந்தனர். இந்நிலையில் 600-க்கும் மேற்பட்ட கல்வியாளர்களும் பிரதமர் மோடிக்கு தங்களின் எதிர்ப்பைத் தெரிவித்துள்ளனர்