வாக்காளர்களை கைய, காலை கட்டி தூக்கிட்டு வந்து தாமரைக்கு ஓட்டுப் போட வைங்கப்பா !! தொண்டர்களுக்கு கட்டளையிட்ட தலைவர் !!
கர்நாடகாவில் வாக்காளர்களின் கை மற்றும் கால்களை கட்டி தூக்கி வந்து தாமரைக்கு வாக்களிக்க வைக்க வேண்டும் கர்நாடக பாஜக முதலமைச்சர் வேட்பாளர் எடியூரப்பா கட்சித் தொண்டர்களுக்கு கட்டளையிட்டிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது,
கர்நாடக மாநில சட்டப்பேரவைத் தேர்தல் வரும் 12-ஆம் தேதி நடைபெறுகிறது. இதையடுத்து மே 15-ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற்று முடிவுகள் அறிவிக்கப்படவுள்ளன. இதையடுத்து காங்கிரஸ் மற்றும் பாஜக தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றன.
இந்நிலையில், பெலகாவியில் நடைபெற்ற பாஜக பொதுக்கூட்டத்தில் கிட்டூர் தொகுதி வேட்பாளர் மஹந்தேஷ் தொட்டகௌடருக்கு ஆதரவாக பாஜக முதலரமைச்சர் வேட்பாளர் எடியூரப்பா நேற்று பிரசாரம் செய்தார்.
அப்போது சாமுண்டி மற்றும் பதாமி ஆகிய இரு தொகுதிகளிலும் சித்தராமையா தோல்வியடைவார். காங்கிரஸ் ஒரு மூழ்கும் கப்பல். எனவே தான் பாஜக-வுக்கு ஆதரவாக வாக்களிக்குமாறு உங்களிடம் நான் கேட்டுக்கொள்கிறேன் என பேசினார்.
இது நீங்கள் ஓய்வெடுக்கும் நேரமில்லை. உங்கள் தொகுதியில் வாக்காளர்கள் யாரும் வாக்களிக்காமல் இருந்தால், அவர்களின் வீடுகளுக்குச் சென்று அவர்களுடைய கை மற்றும் கால்களைக் கட்டி பாஜக-வுக்கு வாக்களிக்க வாக்குச்சாவடிக்கு கொண்டு வாருங்கள் என்று பேசி சர்ச்சைக்குள் சிக்கியுள்ளார்.