ஆளுநரை சந்தித்தார் முதலமைச்சர் எடப்பாடி !! அமைச்சரவையில் மாற்றமா ?
தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித்தை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி திடீரென இன்று சந்தித்துப் பேசினார். அவசர, அவசரமான இந்த சந்திப்பின் பின்னணியில் அமைச்சரைவை மாற்றம் இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
தமிழகத்தில் தற்போது அரசு மீது பல ஊழல் குற்றச்சாட்டுக்கள் கூறப்பட்டு வருகின்றன. இதனால் எடப்பாடி பழனிசாமி கடும் குழப்பத்தில் இருப்பதாக கூறப்படுகிறது. மேலும் 18 எம்எல்ஏக்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்ட வழக்கின் தீர்ப்பு, மத்திய அரசுடன் கசப்பு என தமிழகத்தில் ஒரு இக்கட்டான சூழ்நிலை உருவாகியுள்ளது. இதனிடையே எடப்பாடி அரசைக் கவிழ்க்க டி.டி.வி.தினகரனை ஓபிஸ் சந்தித்தார் எனவும் பேச்சுக்கள் எழுந்துள்ளன.
கருணாஸ் பிரச்சனை, எம்எல்ஏக்கள் பிரச்சனை , தமிழகத்துக்கு மழை எச்சரிக்கை என எடப்பாடி அடுத்தடுத்து பல பிரச்சனைகளை சந்தித்து வருகிறார். இக்கட்டான இந்த சூழ்நிலையில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று மாலை திடீரென ஆளுநர் பன்வாரிலால் புரோகித்தை சந்தித்தார்.
அப்போது தமிழகத்தில் தற்போது நிலவும் பிரச்சனைகள் குறித்து இருவரும் விவாதித்தனர். மேலும் அமைச்சரையில் சில மாற்றங்கள் செய்ய உள்ளது குறித்தும் அவர்கள் பேசியதாக தெரிகிறது. அமைச்சர்கள் மாற்றப்படுவார்களா ? அல்லது அவர்களின் இலாகாக்கள் மாற்றப்படுமா ? என்பது விரைவில் தெரியவரும்.