எட்டு வழிச் சாலை திட்டத்தை நிறுத்தும் எடப்பாடி! மக்கள் மத்தியில் தனக்கான செல்வாக்கை அதிகரிக்க பலே யுக்தி....
சென்னை முதல் சேலம் வரை 8 வழி சாலை அமைக்க அரசு தீவிரமாக ஈடுபட்டுள்ளது. இந்த சாலை அமைய உள்ள 5 மாவட்டங்கள் மட்டுமில்லாமல் ஒட்டுமொத்த தமிழக மக்களும் கோவக் கனலாக உள்ளார்கள். அதற்கு காரணம் அச்சாலைக்காக அழிக்கப்படும் இயற்கை வளங்கள் மற்றும் விவசாய நிலங்கள்தான். தொடர்ந்து நாளுக்கு நாள் விவசாயிகள் மிக கடுமையான எதிர்ப்பை தெரிவித்து வருகிறார்கள்.
ஒரு சிலர் தங்கள் விளை நிலத்தை பறிபோக விடமாட்டோம் என தற்கொலை முயற்சியில் ஈடுபடுகிறார்கள். சிலர் தங்கள் நிலத்தில் படுத்து கண்ணீருடன் கதறுகிறார்கள்.
இப்படி இருக்கையில் எடப்பாடியாரோ எட்டு வழிச் சாலை திட்டத்தைப் போராடிப் பெற்றோம் என்று சட்டமன்றத்தில் சொன்னார், அதன் பின் சேலம் சென்றபோது போராட்டம் வலுக்கவே, ‘இது மத்திய அரசின் திட்டம், இத்திட்டத்திற்கும் எங்களுக்கும் சம்பந்தமில்லை, இது மத்திய அரசு கொண்டுவந்த திட்டம், தமிழக அரசின் பணி நிலத்தை கையகப்படுத்திக் கொடுப்பது மட்டுமே’ என்று சொல்லி சமாளித்தார்.
இந்நிலையில், மூன்று நாட்களாகத் தமிழகத்தில் முக்கியமான நெடுஞ்சாலைத் துறை ஒப்பந்ததாரர்கள்மீது குறிவைத்து ரெய்டு நடத்தியது மத்திய அரசின் வருமான வரித் துறையின் இந்த ரெய்டானது எடப்பாடியை குறிவைத்தே நடத்தப்பட்டது என சொல்லப்படுகிறது. அதுவும் அமித்ஷாவின் வருகையை அடுத்து அரங்கேறியது என அடுத்தடுத்து அதிமுக ஆட்சிக்கு ஆப்படிக்க அமித்ஷாவின் வேலை தான் என அதிமுகவினர் மத்தியில் அனல் பறக்கும் பேச்சாக இருந்தது.
பாஜகவின் இந்த அதிரடி முடிவால் எடப்பாடியும் வேறு ஐடியாவில் இருக்கிறாராம், ’இவ்வளவு நாளா மத்திய அரசு சொல்ற எல்லாத்துக்கும் நாங்க பொறுத்துட்டுதான் இருந்தோம். இப்போ ஏதோ தமிழ்நாடுதான் ஊழல் மாநிலம் என்பது போல பேசிட்டு போய்ட்டாரு அப்படியே விடாம, டெல்லிக்குப் போன வேகத்துல ஐடியை அனுப்பிட்டாரு என புலம்பித்தலிய எடப்பாடி இப்போது, பிஜேபி எதிர்ப்பு என முடிவு செய்த பிறகு, மக்கள் நலனை கருத்தில் கொண்டு எட்டு வழி சாலை திட்டத்தை கொண்டு வர அனுமதிக்க மாட்டோம் என்ற முடிவை எடுக்கலாமா என தீவிர யோசனையில் இருக்கிறாராம்.
அப்படி ஒரு முடிவை எடுத்தால், மக்கள் மத்தியில் இன்னும் தனக்கான செல்வாக்கு கூடும் என்று நினைக்கிறாராம். எட்டுவழிச் சாலை திட்டத்தை முழுமையாக கைவிடுவது, அல்லது தள்ளிப்போடுவது என இரண்டில் ஒரு முடிவை விரைவில் எடுக்கப் போகிறாராம் எடப்பாடியார்.