"போராட்டத்தை கைவிடுங்கள்... ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு தமிழக அரசு அனுமதி அளிக்காது" - முதல்வர் உறுதி
நெடுவாசலில் நடக்கும் போராட்டத்தை கைவிட வேண்டும் எனவும், ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு தமிழக அரசு அனுமதி அளிக்காது எனவும், முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துக்கொள்ளார்.
தமிழகத்தின் பல்வேறு இடங்களில் ஹைட்ரோ கார்பன் எனும் இயற்கை எரிவாயு எடுக்க மத்திய அரசு கடந்த 15-ந் தேதி அனுமதி வழங்கியது.
இதில் புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள நெடுவாசல் எனும் கிராமத்திலும் இயற்கை எரிவாயு எடுக்க அனுமதி வழங்கப்பட்டது.
இந்நிலையில், ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து, கடந்த 16-ந் தேதி நெடுவாசல் பகுதி பொதுமக்கள் போராட்டத்தை தொடங்கினர்.
இந்த போராட்டத்திற்கு மாணவர்கள், இளைஞர்கள், பொதுமக்கள், அரசியல் பிரமுகர்கள், சினிமா பிரபலங்கள் என பல்வேறு தரப்பினரும் ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.
இதனிடையே முதலமைச்சர் பழனிச்சாமியை நெடுவாசல் போராட்ட குழுவினர் ஏற்கனவே சந்திக்க நேரம் கேட்டிருந்தனர்.
ஆனால் முதலமைச்சர் பிரதமரை சந்திக்க டெல்லி சென்றதால் நேரம் ஒதுக்க முடியவில்லை.
பின்னர், நேரம் ஒதுக்கியதன் பேரில், இன்று காலை முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமியை சந்தித்த நெடுவாசல் போராட்டகுழுவினர் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை தடுத்து நிறுத்த வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர்.
இதையடுத்து செய்தியாளர்களை சந்தித்த நெடுவாசல் போராட்டக்குழுவினர், முதல்வரின் பதில் திருப்திகரமாக இருந்ததாகவும், போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மக்களுடன் ஆலோசனை செய்த பின்னர், போராட்டத்தை கைவிடுவதா? தொடர்வதா? என்பது குறித்து முடிவு செய்யப்படும் எனவும்,தெரிவித்தனர்.
இந்நிலையில், முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி போராட்டத்தை கைவிட வேண்டும் என நெடுவாசல் பிரதிநிதிகளுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
தமிழக அரசின் அனுமதி பெறாமல் எதுவும் செய்ய முடியாது.
விவசாயிகள் பாதிக்கப்படுவார்கள் என்பதால் ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு தமிழக அரசு அனுமதி அளிக்காது.
நெடுவாசல் மக்களும், விவசாயிகளும் அச்சப்பட தேவையில்லை.
நெடுவாசலில் வணிக ரீதியான பெட்ரோலிய சுரங்க குத்தகைக்கு உரிமம் வழங்கவில்லை.
விவசாயிகளை பாதிக்கக்கூடிய எந்த திட்டத்தையும் தமிழக அரசு செயல் படுத்தாது.
அரசின் உறுதியை ஏற்று நெடுவாசலில் நடக்கும் போராட்டத்தை கைவிட வேண்டும்.
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.