edappadi plans to reshuffle ministry after getting two leaves symbol

இரட்டை இலை தங்கள் தரப்புக்குக் கிடைத்தவுடனே, தமிழக அமைச்சரவையை மாற்றம் செய்யத் திட்டமிட்டிருக்கிறாராம் முதல்வர் எடப்பாடி பழனிசாமி. 

தேர்தல் ஆணையத்தில், இன்று மதியம் 3 மணிக்கு இரட்டை இலை தொடர்பான வழக்கின் விசாரணை துவங்கி நடைபெற்றது. பெரும்பாலும் இன்றே தங்களுக்கு சாதகமாக தீர்ப்பு கிடைத்துவிடும் என்று எடப்பாடி பழனிச்சாமி தரப்பு காத்துக் கொண்டிருந்ததாம். 

ஆனால், இன்று ஏதோ திட்டமிட்டு வந்தது போல், டிடிவி தினகரன் தரப்பு வழக்குரைஞர், 3 மணிக்கு பேசத் துவங்கி, சுமார் 3 மணி நேரம் இழு இழு என்று இழுத்து விசாரணையை நீட்டித்துக் கொண்டே போனார். அவரது வாதத்தின் இடையே, எடப்பாடி தரப்பு வழக்குரைஞர் முகுல் ரோத்தஹி குறுக்கிட்டார். ஆனால் அதற்கு எதிர்ப்பு தெரிவித்து தினகரன் தரப்பு வழக்குரைஞர் தன் வாதத்தை நீட்டித்துக் கொண்டே போனார். 

மாலை ஐந்தரை மணிக்கும் மேல் அவர் வாதாடிக் கொண்டிருந்ததால், அப்போதே தெரிந்துவிட்டது. மேலும் ஒரு ஒத்திவைப்புதான் நடக்கப் போகிறது என்று! இந்நிலையில் வழக்கு விசாரணையை நவம்பர் 6ஆம் தேதிக்கு ஒத்தி வைத்தது தேர்தல் ஆணையம். தற்போது தினகரன் தரப்பு வாதம் முடிந்து, தொடர்ந்து, அதற்கு பதிலளிக்கும் விதமாக எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் தரப்பு வழக்குரைஞரின் வாதம் முடிந்து, அதன் இறுதி வாதம் முடிந்த பின்னரே தீர்ப்பு வழங்கப்படும் என்று கூறப்படுகிறது. 

எம்.எல்.ஏ.க்கள் தங்கள் பக்கம் இருப்பதால், இரட்டை இலை சின்னம் எப்படியும் தங்கள் தரப்புக்குக் கிடைத்துவிடும் என்ற நம்பிக்கையில் காத்திருக்கிறார் எடப்பாடி பழனிசாமி. அவ்வாறு இரட்டை இலை சின்னம் மட்டும் தங்கள் பக்கம் கிடைத்துவிட்டால், முதல் வேலையாகக் கட்சிக்குள்ளும் ஆட்சிக்குள்ளும் ஒரு சில மாற்றங்களைச் செய்ய வேண்டும் என்பதுதான் அவரின் முதல் திட்டம். 

அதில், அவரிடம் ஒரு பட்டியல் கையில் உள்ளது. முதலில், ஆட்சிக்கு யாரால் கெட்ட பெயர் ஏற்படுகிறது என்பதைப் பார்த்து அவர்களை ஒதுக்கிவைக்க யோசிக்கிறாராம். அப்படி 8 அமைச்சர்களின் பட்டியல் எடப்பாடி பழனிசாமி கையில் இருப்பதாகக் கூறப்படுகிறது. அந்த 8 பேரில், திண்டுக்கல் சீனிவாசன், ராஜேந்திர பாலாஜி ஆகியோரும் அடங்குவராம். 

மேலும், இவர்கள் எட்டு பேரும் சசிகலா குடும்பத்துடன் மறைமுகமாகத் தொடர்பில் இருக்கின்றனராம். இதனை உளவுத் துறை முதல்வரிடம் தெரிவித்ததாகக் கூறப்படுகிறது. இதை உறுதிப்படுத்திக்கொண்ட முதல்வர் எடப்பாடி, ‘இம்மாதிரி நபர்களை எல்லாம் வெச்சுகிட்டு எப்படி ஆட்சி செய்ய முடியும்? இவங்களால நமக்கு கெட்ட பேரு. முதல்ல இவங்களை அமைச்சரவையில் இருந்து விடுவிக்கணும். புதிதாக அமைச்சரவையில் எவரையெல்லாம் சேர்க்கலாம்னு பேசி முடிவெடுக்கலாம்...’ என்று கூறியுள்ளார் என்கிறார்கள்.

எனவே இரட்டை இலை மட்டும் எடப்பாடி பழனிசாமி கைக்கு கிடைச்சுடட்டும்... அப்புறம் பாருங்க... அமைச்சருங்க எப்படி செயல்படுறாங்க... அரசு எப்படி செயல்படுதுன்னு...!