வேலுமணியும், தங்கமணியும் சேர்ந்து உருவாக்கிய பொம்மை தான் எடப்பாடி பழனிசாமி...! புகழேந்தி குற்றச்சாட்டு
எடப்பாடி பழனிசாமியை பதவி விலக கோரி சேலத்தில் மிகப்பெரிய அளவில் பேரணி நடத்த இருப்பதாக பெங்களூர் புகழேந்தி தெரிவித்துள்ளார்.
அதிமுக-சசிகலா இணைப்பு
ஜெயலலிதா மறைவிற்கு பிறகு அதிமுக சந்தித்த அனைத்து தேர்தலிலும் தொடர் தோல்விகளை சந்தித்து வருகிறது. இதற்கு அதிமுக-அமமுக பிரிந்து இருப்பது தான் காரணம் எனவும், எனவே மீண்டும் இணைய வேண்டும் என அதிமுகவின் ஒரு பிரிவினர் கோரிக்கை விடுத்து வருகின்றனர். இந்தநிலையில் தான் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர் செல்வத்தின் சகோதரர் ஓ.ராஜா சசிகலாவை சந்தித்து அதிமுக தலைமை ஏற்கும் படி கேட்டுக்கொண்டார். அடுத்த தினமே அதிமுகவில் இருந்து ஓ.பன்னீர் செல்வத்தின் ஒப்புதலோடு ஓ.ராஜா நீக்கப்பட்டார். இதனால் அதிர்ச்சி அடைந்த அதிமுகவின் ஒரு பிரிவினர் சசிகலா தொடர்பாக எந்த கருத்து கூறாமால் அமைதியாகினர். இந்தநிலையில் அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட முன்னாள் அமைச்சர் அன்வர் ராஜா, பெங்களூர் புகழேந்தி, ஓ.ராஜா உள்ளிட்டோர் சென்னையில் ஆலோசனை கூட்டம் நடத்தினர். இந்த கூட்டத்தில் அதிமுகவை மீட்க நவடிக்கை எடுப்பது தொடர்பாக ஆலோசனை மேற்கொண்டர். விரைவில் மிகப்பெரிய மாநாடு நடத்துவது குறித்தும் முடிவு எடுத்தனர்.
எடப்பாடிக்கு எதிராக விரைவில் பேரணி
இந்தநிலையில் அடுத்த கட்ட நடவடிக்கை தொடர்பாக கருத்து தெரிவித்த பெங்களூர் புகழேந்தி, அதிமுகவில் இரட்டை தலைமை என்பது போலியானது என தெரிவித்தவர், தனது ஒருங்கிணைப்பாளர் பதவியை தக்க வைக்க ஓ.பன்னீர் செல்வம் நாடகம் நடத்தி வருவதாக குற்றம்சாட்டினார். அதிமுகவிற்கு எதிர்காலம் என்பதே இல்லையெனெறு தெரிவித்தவர் அனைத்து தேர்தல்களிலும் தொடர் தோல்வி சந்தித்துள்ளதாக கூறினார். எடப்பாடி பழனிசாமியை கட்சியில் இருந்து விலக கோரி சேலத்தில் மிகப்பெரிய அளவிலான பேரணி நடத்தவுள்ளதாக தெரிவித்த புகழேந்தி, தேர்தல் தோல்விக்கு அதிமுக மாவட்ட செயலாளர்களை சசிகலா நீக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். மேலும் அதிமுகவிற்கு புதிய மாவட்ட செயலாளர்களை நியமிக்க வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தினர். தற்போது உள்ள நிலையில் எடப்பாடி பழனிசாமி, அண்ணாமலையை தேடிப்போகும் நிலை தான் உள்ளதாகவும், பாஜக அதிமுகவை நாடி வரப்போவதில்லை என கூறினார்.
எடப்பாடி பழனிசாமி பொம்மை
இந்தியாவிலேயே அதிக அளவிலான கொள்ளை அடித்த அமைச்சர்கள் யார் என்று பார்த்தால் அது அதிமுக அமைச்சர்கள் தான் என கூறினார். சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கராக இருந்தாலும், வேலுமணியாக இருந்தாலும் அனைத்து இடங்களிலும் முறைகேட்டில் ஈடுபட்டதாக குற்றம்சாட்டினர். எனவே தங்கமணி மற்றும் வேலுமணி அழகு பார்த்து உருவாக்கிய பொம்மைதான் எடப்பாடி பழனிசாமி என கூறியவர், எடப்பாடி பழனிசாமி, தங்கமணி, வேலுமணி பாஜகவில் இணைவார்களே தவிர சசிகலாவை ஏற்றுக்கொள்ளமாட்டார் என தெரிவித்தார்.